வியாழன், 24 செப்டம்பர், 2015

உணர்வுகளும் உணர்வுகளும் .



எண்ணிலடங்கா உணர்வுகளை
புரிந்து கொள்ள முடிகிறது .
என்னிலடங்காத உணர்வுகளைத்தான்
என்ன செய்வதென்று

தெரியவே இல்லை .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]

மேகங்களின் அழுகை .


பகலில் பகலவனின் வெம்மை
தாளாது அழ நேரிடுகின்றது
இரவில் நிலவின் குளிர்ந்த அன்பு
அழ வைக்கின்றது
இப்படி அவ்வப்போது யாராலாவது
மேகங்கள் அழ வைக்கப் படுகையில்தான்

கொஞ்சமேனும் குளிர்கிறது பூமி .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]

மீட்கப் பட்ட ஏதேன் தோட்டக் கனி .


மீட்கப் பட்ட ஏதேன் தோட்டக் கனி .

இரக்கம் வந்தது மனிதன் மீது.
இறங்கி வந்தார்
கடவுள் தரைக்கு...
மூட்டையாக்கிச் சுமந்து சென்றார்
மனித பாவங்களை தலை மீது ...
இளைப்பாற நினைத்து
இறக்கி வைத்து
இமைகள் செருகி
தூங்கி எழ மூட்டையில்லை ...
வைத்த இடத்தில் .
பாவமே இல்லாமல்
வாழ்வது எப்படி ? “
தூரத்தே நின்று
மனிதன் கேட்டான்
மூட்டையைப் பிரித்தவாறு ... !
[ பாக்யா பிப்ரவரி 13 – 15 ; 2015 ]


கசிவு


எப்படி குவிப்பினும் தேக்க இயலாது
விரல்கள் வழி விரையும் ஆற்று நீராய்
கசிந்து கொண்டேயிருக்கின்றன
வாழ்வின் சந்தோஷமான கணங்கள்

குவியும் கவலைகளையும் மீறி .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]

தழல் .


பற்றியெரிந்த நெருப்பு
முற்றிலுமாக அணைந்து விட்டது
எஞ்சியிருக்கும் சாம்பல்
ஏங்குகிறது இன்னொரு பொறிக்காக

வாட்டும் குளிர் போக்க .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]

பயணம் .


பாய்மரப் படகில்
காற்றின் திசையில் பயணம் .
பயணக் களைப்பில்
மனம் தேடியது
நிலம் தெரியாதாவென்று
கண்கள் சோர்ந்து போகும் வரை .
தேடலின் முடிவில்தான்
தெரிந்தது
இத்தனை நாளாய்
படகு பயணித்ததே

தரையில்தான் என்று .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]

நம்பிக்கை .


நம்பிக்கை .

456
எட்டாவது குறுக்குத் தெரு
குறிஞ்சி நகர்...
பலமுறை போய் வந்த முகவரிதான் .
வேகாத வெயிலில்
அலைந்து திரிகிறேன் .
திசைகள் மாறாவிடினும்
வீடு வந்து சேர வில்லை இன்னும் .
கேட்கப்படும் ஒவ்வொருவரிடமிருந்தும்
வெளிப்படுகின்றன
வெவ்வேறு விதமான வழிகாட்டுதல்கள் .
பசி மறந்து நடக்கின்றேன்
வழி தவறி விடக்கூடாதேயென்ற
பதட்டத்துடன் .
தெரிந்த அடையாளங்கள்
தேய்ந்து போயிருந்தன .
காலத்தின் ஓட்டத்தில்
நகரம் மாறித்தான் இருக்கிறது .
கதவிலக்கம் மாறியிருக்கலாம் ;
தெருப் பெயரும் மாறியிருக்கலாம் ;
குறிஞ்சி நகர் கூட வேறொரு
நகராக மாறியிருக்கலாம் .
தளராது நடக்கிறேன்
நண்பன் மாறியிருக்க மாட்டான்
நட்பும் மாறியிருக்காதென்ற
அசைக்க முடியா நம்பிக்கையோடு .

[ கணையாழி பிப்ரவரி 2015 ]