தளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கேள்விகளும் பதில்களும் .


கேள்விகளும் பதில்களும் .

கேட்டிருந்திருக்கலாம் அந்தக் கேள்விகளை
எதிர்ப்பட்ட  யாரேனும் ஒருவரிடம் .
சொல்லியிருந்திருக்கலாம் அந்தப் பதில்களை .
கேட்கப்படாத கேள்விகளும்
அளிக்கப்படாத பதில்களும்
சுற்றிச்சுற்றி வருகின்றன  மனதிற்குள் .
கேட்டுவிடலாம் அல்லது  சொல்லப்படலாம்
என்றேனும் ஒருநாள்  யாரேனும் ஒருவரிடம்
என்ற அதீத நம்பிக்கைகளோடு .


                              [ தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

யாருக்கான கவிதை ?


யாருக்கான கவிதை ?

எனக்கே எனக்கென்று
எழுதும் கவிதையின்
இரண்டாவது வரியிலேயே
எப்படியாவது நுழைந்து விடுகிறார்கள்
வாசிப்பவர்களும்
அதன்பின் அவர்களுக்கும்
உரியதாகி விடுகிறது
அந்தக் கவிதையும் .

[ தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

எஞ்சியவை .



எஞ்சியவை .
நீண்ட நாட்களுக்குப் பின்
கண்ட நண்பனோடு
பசுமையிழந்து போன பூங்காவின்
சிதைவுற்ற சிமெண்ட் இருக்கை
தேடி
அமர்ந்த இடத்தருகில்
எஞ்சியிருந்த ஒற்றைச் செடியில்
ஏதோவொரு பெயர் தெரியாப் பூச்சி
தேடிக் கொண்டிருந்தெதையோ .
கையிலிருந்த
படபடக்கும் பட்டாம்பூச்சி குறித்த
கவிதைத் தாளை காட்டினேன்
வாசிப்பதில் விருப்பமுள்ள
தோழனிடம் .
பட்டாம்பூச்சியல்ல
வண்ணத்துப் பூச்சியே சரியென்றான்
கவிதைக்குள் போகாமலே நண்பன் .
அவரவர் கருத்துகளை
பரிமாறிக்கொண்ட கணத்தில்
கலைந்து போன நிசப்தத்தால்
பாதிக்கப்பட்டு
பறந்துபோய்விட்டது அந்த
பெயர் தெரியாப் பூச்சி
வேறு செடி தேடி .
வார்த்தைப் பரிமாற்றங்களின்
முடிவிலெந்த முடிவுக்கும் வராது போக
திருப்பி வாங்கிக் கொண்ட கவிதையை
திரும்பிப் பார்க்கையில்
பட்டாம்பூச்சியுமில்லை
வண்ணத்துப் பூச்சியுமில்லை
கவிதையில்
வெறும் வார்த்தைகளே எஞ்சியிருந்தன .


[ தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]

உருமாற்றம் .



உருமாற்றம் .

எந்தக் கணத்தில்
பறவையாக மாறினேன் நானென
புலப்படவில்லை இதுவரையெனக்கு .
முதலில் சிறகுகள் முளைத்ததாகத்தான்
ஞாபகம்
அல்லது அலகுகளாகக் கூட
இருக்கலாம் .
ஏதோவொன்று
எதுவென்று
தெளிவாயில்லை நினைவுகளில் .
எனினும்
பறவையாக மாறி விட்டேனென்று
உறுதிப் படுத்தியது
நானமர்ந்திருந்த மரக்கிளயின்
இலைகளிலொன்றின் உரசல் .
சிறகுகள் உதிர்ந்தும்
அலகுகள் சிதைந்தும் போய்
எல்லாம் முடிந்தும்
மனம் மட்டும் பறந்து
கொண்டேயிருக்கிறது
உருமாற்றத்திற்கு வழியில்லாமலும்
தரையிறங்கத் தெரியாததாலும் .


[ தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]