வெள்ளி, 31 அக்டோபர், 2014
வியாழன், 30 அக்டோபர், 2014
தீர்வு
தீர்வு
உளிகளின் மன
உளைச்சலால்
சிதைந்து போன
சிற்பங்களின்
சிதறல்கள் .
தூரிகைகளின்
கோபத்தால்
கலைந்து போன
ஓவியத்தின்
கோடுகள் .
வார்த்தைகளின்
குழப்பத்தால்
பாதியில்
நின்று போன
கவிதை வரிகள் .
நரம்புகள்
முறுக்கிக் கொண்டதால்
ஸ்வரம் தவறிய
சங்கீதங்கள் .
தோலில் துளை
விழுந்ததால்
தடுமாறிய
தாளங்கள் .
எல்லாவற்றையும்
வாரி அள்ளி
தெருவோரத்
தொட்டியில்
போட்ட பின்பு
மேலும் அதிகமாக
ஒளிரத்
தொடங்கியது
வானத்து நிலா .
[ கணையாழி மே
2014 ]
புதன், 29 அக்டோபர், 2014
செவ்வாய், 28 அக்டோபர், 2014
திங்கள், 27 அக்டோபர், 2014
பிம்பம் .
பிம்பம் .
கண்ணாடியில்
முகம் பார்க்காமலே
கழிந்து
போன காலம் நிறைய உண்டு .
வகிடெடுக்கும்
வழக்கம் இல்லாததால்
தலை
வாரவும் கண்ணாடி பார்த்ததில்லை .
அகத்தின்
அழகு தெரிந்து விடுமோவென்ற
அச்சத்தினாலும்
இருந்திருக்கலாம் .
முகமில்லை
அகமென்று
உணர்ந்த
பின்னும்
ஏனோ
கண்ணாடி பார்க்கத்
தோன்றவேயில்லை
.
எனினும்
முகம்
காணும் வேட்கையில்
கண்ணாடி
பார்க்கும் ஆசை
வந்த
போது
முகம்
தொலைந்து போயிருந்தது .
இப்போதோ
தெளிவான
நீரில் கூட
தொலைந்து
போன
முகம்
தேடும் மனம் .
[
புதுப்புனல் அக்டோபர் 2014 ]
ஞாயிறு, 26 அக்டோபர், 2014
சனி, 25 அக்டோபர், 2014
கவிச்சூரியனில் கவிதை மூன்று
காலனுக்கும் ஆசை
கவியரசரின்
கவிதை கேட்க .
உலகில் உள்ளோர்
அனைவருக்கும் உணவு
அதுவே நம் கனவு .
வாழ்க்கையிலும் தேவை
வார்த்தைகளிலும் தேவை
சிக்கனம் .
கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 26 [ அக்டோபர் 16 - 31 , 2014 ]
வெள்ளி, 24 அக்டோபர், 2014
பாட்டியின் பாம்படம் .
பாட்டியின் பாம்படம் . சிறுகதை - சுப்ரா
ஓவியம் - மருது .
பூவரச மரத்து நிழல்
இதமாக இருந்தது . முத்தையா பனியனுக்கு மேல் போட்டிருந்த துண்டை உதறி முகத்தைத்
துடைத்துக் கொண்டான் .
களத்து மேட்டு
மூலையில் பூவரச மரத்தின் அடியில் இருந்த திண்டின் மீது துண்டை விரித்து
உட்கார்ந்தான் .
“ என்ன
முத்தையா ! இந்த வருஷம் வெளைச்சல் எப்படி ? “
மண் சுவருக்கு
மறுபுறம் கந்தசாமி நின்று கொண்டிருந்தார் .
“ நல்ல
வெளைச்சல்தான் அண்ணாச்சி . எனக்கு வெவரம் தெரிஞ்சு இத்தனை மேனி போனதில்லை . இந்த
வருஷம் தண்ணி நல்ல நேரத்தில விட்டான் . உரமும் நல்லா புடிச்சுகிச்சு “
“ வெலையும்
எக்கச்சக்கமா இருக்குதாம் . நல்ல பார்ட்டியா பார்த்துப் போடு . சவத்துப் பயலுவ
ஏமாத்திடுவானுக . “
கந்தசாமி போய்
விட்டார் . முத்தையாவுக்கு அப்பா ஞாபகம் வந்தது.
” முத்தையா ! மழை இல்லாம பூமியில வெளைச்சல்
சரியில்லைன்னு வித்துடாதே . என்னைக்காவது ஒருநாள் அள்ளித் தரும்.“ அப்பா அடிக்கடி
கூறுவார் .
அந்த வருடத்து அமோக விளைச்சலைப் பார்க்க அப்பா இல்லாமல் போய் விட்டாரே
என்று நினைத்தான் . அப்பாவின் நினைவில் மனம் கனமாகிப் போனது .
முத்தையாவையும் தம்பி பழனியையும் உட்கார வைத்து பரிமாறினாள் லட்சுமி .
சாப்பிட்டு விட்டு வாசலில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது
கண்ணம்மா ஆச்சி வந்தாள் . முதையாவின் தந்தை வழிப் பாட்டி .
“ ஆச்சி , எங்க போயிட்டு வாறே ? “
“ கோவிலுக்குப் போனன்டா முத்தையா . கூட யாரு பழநியா ? மூதேவி , கீழே இறங்கி
உட்காருலே . அண்ணாச்சிக்கு சமமா உட்காருவியோ ? “
“ இருக்கட்டும் ஆச்சி . நீ உட்காருபழநி . ஆச்சி ! இந்த வருஷம் நல்ல
வெளைச்சல் . நாளைக்கு நெல்லை வித்ததும் முதல்ல ஒனக்கு தங்கத்துல ஒரு ஜோடி பாம்படம்
செஞ்சுடலாம் . ”
“ அது
கிடக்கட்டும் . முதல்ல லட்சுமிக்கு ஒரு சங்கிலி செஞ்சு போடு . எனக்கென்னா கெழவி .
“ ஆச்சியின் வார்த்தைகளை மீறி அவளுடைய சந்தோஷம் வெளிப்பட்டது .
“ அதையும்
பண்ணிடலாம் . “
பாட்டி உள்ளே
போய் விட்டாள் .
நெல் விற்ற
பணத்தை முத்தையா எண்ணிப் பார்த்தான் . எட்டாயிரம் இருந்தது .
“ பழநி ! நீ
போய் ஆசாரியை வரச் சொல்லிடு . ஆச்சிக்கு பாம்படமும் லட்சுமிக்கு செயினும்
செய்யணும் . டவுனுக்குப் போய் தங்கம் வாங்கியாந்திடலாம் . “
தனது ரொம்ப
நாளைய ஆசை நிறைவேறப் போகிறது என்ற எண்ணத்தில் ஆச்சி ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் .
“ உங்க
அப்பங்கிட்ட சொல்லி சொல்லி சலிச்சுப் போயிட்டேன். அவனைச் சொல்லியும் குத்தமில்லை .
வந்த காசு வீட்டு செலவுக்கே சரியாப் போச்சு . மிஞ்சினாத்தானே தங்கத்தில பாம்படமும்
ஒட்டியாணமும் . ஏதோ இப்பவாவது நேரம் வந்துச்சே . “
முதையாவிற்கும்
சந்தோஷமாக இருந்தது . ஆச்சியின் வெகுநாளைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் போகும்
சந்தோஷம் .
இரண்டு
நாட்களும் ஆச்சியின் பேச்சு முழுவதும் தங்கப் பாம்படங்களைப் பற்றிதான் . மூன்றாம்
நாள் ஆசாரி பாம்படங்களை காகிதத்தில் பொதிந்து கொண்டு வந்தார் . காகிதத்தைப்
பிரித்து பாம்படங்களைக் காட்டியதும் ஆச்சியின் உற்சாகம் உச்சத்தை அடைந்து விட்டது
.
“ என்னம்மா
மின்னுது பாரேன் ! ஏ அப்பா ! தங்கம் நயம்தான் . என்னமா ஜொலிக்குது ! “
பழைய பித்தளைப்
பாம்படங்களை கழற்றி விட்டு ஆச்சியின் காதுகளில் தங்கப் பாம்படங்களை மாட்டி
விட்டாள் லட்சுமி . கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டினாள் . பாட்டி மின்னும்
பாம்படங்களை கண்ணாடியில் பார்த்து பூரித்துப் போனாள் . காதுகளையும்
பாம்படங்களையும் மாறி மாறி தடவி விட்டுக் கொண்டாள் .
ஆச்சி
பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் போய் தங்கப் பாம்படங்களை காட்டி வரப் போய் விட்டாள்
. ஊரிலேயே முதல் தங்கப் பாம்படங்கள் என்ற பெருமையோடு .
அன்று இரவு
முத்தையாவும் பழநியும் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் போதே
ஆச்சியின் குரல் கேட்டது . கூட இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் .
பக்கத்தில் லட்சுமியும் நின்றாள் .
முத்தையாவைக்
கண்டதும் ஆச்சியின் குரலில் சோகமும் , எரிச்சலும் அதிகமாயின .
“ முத்தையா !
கேட்டியாலே அநியாயத்தை . நீ ஆசையா வாங்கிப் போட்ட பாம்படத்தை எந்த சண்டாளப் பாவியோ
அவுத்துட்டுப் போயிட்டாம்ல . அம்மன் அவனைச் சும்மா விட மாட்டா . அவன் கை
புளுத்துப் போகும் . காலு மடங்கிப் போகும் . “
வடக்குத்
தெருவில் இருந்த சொந்தக்காரர்களிடம் பாம்படத்தைக் காட்டுவதற்காக போய் விட்டுத்
திரும்பும் போது பனையன் மடம் அருகில் ஆச்சியை யாரோ ஒருவன் வழிமறித்து மிரட்டி
பாம்படங்களை கழற்றிக் கொண்டு ஓடி விட்டிருக்கிறான் .
ஆச்சியின்
புலம்பல் அதிகமானது .
“ சரி ஆச்சி
விடு , போனது போனதுதான் . நல்ல வேளை காதோட சேர்த்து பிய்க்காம விட்டானே . நாளைக்கு
நம்ம ஆளுங்களை விட்டுத் தேடச் சொல்லுவோம் . திருட்டுப் பய அகப்படாமலா போயிடப்
போறான்?”
கட்டிலில்
வந்து படுத்தான் முத்தையா . பாம்படம் போனதை விட ஆச்சியின் வருத்தம்தான் முத்தையாவை
அதிகமாக பாதித்திருந்தது .
கட்டிலில்
படுத்ததும் தூக்கம் வரவில்லை . உள்ளே ஆச்சியின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது .
திருடனை பலவிதமாக திட்டிக் கொண்டிருந்தாள் .
முத்தையாவின்
எண்ணங்கள் வேறு திசையில் ஓடின . எழுந்து உட்கார்ந்தான் . பக்கத்தில் கீழே பாய்
விரித்து சாய்ந்திருந்த பழநியும் எழுந்து உட்கார்ந்தான்
.
“ அண்ணாச்சி !
ஆச்சி பாம்படத்தை திருடினது யாரா இருக்கும் ? “
“ தெரியலடா
பழநி ! ஆனா ஒண்ணு கவனிச்சியா . இந்த வருஷம் நல்ல வெளைச்சல் . அதனால நம்ப பொருளாதார
நெலைமை ஆச்சிக்குத் தங்கத்துல பாம்படம் செஞ்சு போடற அளவுக்கு உயர்ந்திருக்கு .
இந்த வருட வருமானத்தில் அது ஒரு சின்ன செலவுதான் . ஆனா அந்த அரைக்காப் பவுன்
பாம்படத்தைத் திருடித்தான் சாப்பிடனும்கற அளவுக்கு நாட்டில சில பேரோட பொருளாதார
நிலைமை மோசமா இருக்கு பார்த்தியா ? “
“ அது எப்படி
அண்ணாச்சி ? திருடறவன் உடலை வருத்தி உழைக்கச் சோம்பேறித்தனம் பட்டு திமிறிலதான
திருடறான் . “
“ திருடறது
தப்புதாண்டா பழநி . ஆனா இப்படி ஒரு கிழவியோட அரைக்காப் பவுன் பாம்படத்தை ஒருத்தன் திருடுறான்னா
அவனோட சந்தர்ப்ப சூழ்நிலைங்க ரொம்ப மோசமாத்தான் இருக்கணும் . வேற வழியில்லாமத்தான்
தப்பு பண்றான்ணு தோணுது . உழைச்சு சாப்பிட வாய்ப்பே கெடைக்காதவனா இருக்கலாம் .
இப்படி சின்னத் திருட்டில ஆரம்பிச்சு பெரிய திருட்டுக்குப் போகும் போது வேணும்னா
அது அவனோட தப்புங்கலாம் . திமிருங்கலாம் . ஆனா இது ... “
முத்தையா
பேச்சைத் தொடர்ந்து சிந்தனையில் ஆழ்ந்து போனான் . ஒரு பெருமூச்சு வெளிவந்தது .
ஆச்சியின் குரல்தான் மெளனத்தை கலைத்தது .
“ முத்தையா !
நாளைக்கு அம்மன் கோவில் பூசாரிகிட்ட மைபோட்டுப் பார்க்கணும்ல . “
சற்றுமுன்
பழநியிடம் பேசியவை ஞாபகம் வந்தது . ஆச்சியிடம் அதையெல்லாம் சொன்னால் புரியாது .
அவளைச் சமாதானப் படுத்த ஒரே ஒரு வழிதான் தோன்றியது .
“ சரி ஆச்சி .
பாத்துடுவோம் . அது கெடைச்சதுன்னா பார்ப்போம் . இல்லாட்டி ஆசாரிகிட்ட சொல்லி புதுசா வேற ஒரு
ஜோடி செஞ்சிடுவோம்.”
கொஞ்ச
நேரத்தில் ஆச்சி தூங்கி விட்டாள் .
-----------
-------------- --------------- --------------
அக்டோபர் 06 – 12 , 1989 தேதியிட்ட பாக்யா
வார இதழில் வெளி வந்த எனது சிறுகதை .
-----------
------------- ------------ -----------------
வியாழன், 23 அக்டோபர், 2014
பண்ட மாற்று .
பண்ட
மாற்று .
மதுரை
வீரனுக்கு
சுருட்டும்
சாராயமும் .
மரத்தடி
விநாயகருக்கு
நெய்
கலந்த வெண்பொங்கல் .
முழிக்கும்
முனியப்பனுக்கு
கொளுத்த
கிடா .
நாக்கு
துருத்திய காளியாத்தாவுக்கு
நல்ல
நாட்டுக் கோழி .
களத்தடிப்
பெருமாளுக்கு
தாளித்த
தயிர்ச் சாதமும்
கொண்டைக்
கடலை சுண்டலும் .
சாமிகள்
விரும்புவதைப்
படைத்தாயிற்று
.
அவரவர்
விரும்புவது
அவரவர்க்கு
கிடைக்குமென்ற
நம்பிக்கையில்
.
[
புதுப்புனல் செப்டம்பர் 2014 ]
செவ்வாய், 21 அக்டோபர், 2014
இந்தத் தடவையாவது ...
இந்தத் தடவையாவது ...
“ கொஞ்சம்
இருண்ணே . இன்னும் ஒரு டிக்கெட் வரலை . ரிசர்வ் பண்ணது . அஞ்சு நிமிஷம் இருக்கில்ல
. பார்த்துட்டுப் புறப்படுவோம் . “ என்றார் நடத்துனர் .
நடத்துனர்
அனுமதித்த ஐந்து நிமிடம் முடிந்ததும் ஓட்டுனர் வண்டியை பின்னால் ஓட விட்டு நகர்த்தினார்
.
அந்த இளைஞன்
ஒரு பெட்டியைத் தூக்கியவாறு திருவள்ளுவரை நோக்கி ஓடி வந்தான் . பெட்டி கனமானதுதான்
.
பஸ்ஸில்
ஏறியவன் மருதுவின் பெட்டிக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் பெட்டியை வைத்தான்
. மருதுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மருதுவைப் பார்த்துப் புன்னகைத்தான் .
மருதுவின்
பார்வை அவன் பெட்டியின் மீது பாய்ந்தது . இரண்டு பெட்டிகளும் ஒரே மாடல் . ஒரே கலர்
. நடுவில் கூடுதல் பூட்டு வைத்த மாடல் . இரண்டிலும் ஒரே மாதிரி பளபளா .
மருது
தீர்மானித்து விட்டான் . இந்த தடவை எப்படியாவது பெட்டியை மாற்றிவிட வேண்டும் .
நடத்துனர்
எல்லா டிக்கெட்டுகளையும் பார்த்துவிட்டு விளக்கை அணைத்ததுமே பக்கத்து ஸீட் வாலிபன்
சாய்ந்து தூங்கி விட்டான் .
மருதுவுக்குத்
தூக்கம் வரவில்லை . சிந்தனை முழுவதும் பெட்டியை மாற்றுவதிலேயே இருந்தது .
பெட்டியை
மாற்றும் சிந்தனைகளில் மூழ்கியவாறே தூங்கி விட்டான் மருது .
தூக்கம் கலைந்த
போது திருவள்ளுவர் நின்றிருந்தார் . எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள் .
பக்கத்து ஸீட் வாலிபன் ஏற்கனவே இறங்கி விட்டிருந்தான் .
மருது தன்
பெட்டியை எடுத்துக் கொண்டான் . அவன் திருமணத்திற்கு சென்னை நண்பர்கள் பரிசாகக்
கொடுத்திருந்த அந்த பெட்டியில் நடுப் பூட்டு ஆரம்பத்தில் இருந்தே சரியாக வேலை
செய்யவில்லை . அதன் பின் நாலைந்து தடவை சென்னை வந்தும் நேரம் கிடைக்காமல் போய்
விட்டது . இந்தத் தடவை காலையிலேயே வந்த வேலையை முடித்து விட்டு மத்தியானம்
எப்படியும் அந்த கடைக்குப் போய் கியாரண்டி கார்டையும் , பில்லையும் காண்பித்து
வேறு பெட்டி மாற்றிக் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறு மருது தன் பெட்டியோடு
லாட்ஜ் நோக்கி நடந்தான் .
--------------
--------------------- ---------------------
02 . 09 . 1993
தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளிவந்த எனது ஒரு பக்கக் கதை .
திங்கள், 20 அக்டோபர், 2014
ஞாயிறு, 19 அக்டோபர், 2014
சனி, 18 அக்டோபர், 2014
நாமும் அவைகளும்
நாமும் அவைகளும் .
எதை நீ
அன்பென்கிறாய் ?
உன்னை
நேசிக்கும்
அதே அளவில்
இந்த புல்லை ,
அந்த மேகங்களை
,
மின்னும்
நட்சத்திரங்களை ,
நிமிர்ந்த
மரங்கள் ,
அதன் இலைகள் ,
வீசும் காற்றை
நேசித்தல் தவறா
?
அசைவென்பது
உனக்கு மட்டுமா
?
அசைவும் ,
உணர்வும்
உள்ள
அவைகளுக்கு
நேசிக்கப்படும்
தகுதி இல்லையா ?
எனவே
நண்பனே !
புல்லை
மிதிக்காதே ...
இலையைப் பறிக்காதே
...
மரங்களை
வெட்டாதே ...
இன்னும் ...
[ புதுப்புனல் நவம்பர் 2013 ]
வெள்ளி, 17 அக்டோபர், 2014
பார்வை - சிறுகதை .
பார்வை
. சிறுகதை
நகரத்திற்கே
உரித்தான பரபரப்பு . மாலைச் சூரியனின் மரண அவஸ்தை .
நான் போக
வேண்டிய இடத்திற்கு பஸ் இன்னும் ஒருமணி நேரம் கழித்துத்தான் . என்னைப் பொறுத்த
வரையில் ஒவ்வொரு நாளும் இப்படி பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் மாலை நேரம்தான்
வாழ்வின் நிஜங்களைத் தரிசிக்கும் கணங்கள் .
காகிதங்களுடனும்
, எண்களுடனும் அலுவலகத்தில் கழியும் ‘வயிற்றுக்காக
‘ நேரத்திற்கும் , காற்றில்லாத அறையின் அவலத்தில் ஸார்த்தரின் எழுத்துக்களோடு
உறவாடும் ‘ மனதிற்காக ‘ நேரத்திற்கும் இடையில் உள்ள இந்த நேரம்தான் மனித மனத்தின்
நிஜமான பக்கத்தைக் காட்டும் புத்தகம் .
எதிரே
தெரிகின்ற உயர்ந்த கட்டிடம் . பின்புறம் ஓடும் கழிவுநீரின் கரைகளில்
முடங்கியிருக்கும் குடிசைகள் – அதனைச் சுற்றி உழலும் ஒரு தனி உலகம் .
எதிர்ச்
சுவரில் பெரிய போஸ்டர் . உடைகளைப் பற்றிக் கவலைப் படாத கதாநாயகி . அவளை விடப்
பெரியதான A . அந்தப் படங்களைப் போடுவதற்கென்றே சில தியேட்டர்கள் . அந்தப்
போஸ்டர்களை ஒட்டுவதற்காகவே சில சுவர்கள் .
பக்கத்தில்
சிறிதாக பகல் காட்சியில் ‘ 7வது மனிதன் ‘ . பிழைக்கத் தெரியாத டைரக்டர் .
பெரிய சதுரத்தை
நிற்க வைத்து வர்ணங்களை இறைத்தாற்போல பெட்டிக்கடை . எத்தனை பத்திரிகைகள் ! இலக்கிய
ஆர்வம் வளர்கிறது என்ற பெருமிதத்தைக் கொல்வதற்காகவே அவற்றின் பின்னால் கயிற்றில்
தொங்கும் சில பத்திரிகைகள் . அவற்றின் அட்டையில் போஸ்டர் கதாநாயகியின் சிறு
பதிப்புகள் . பெண்மைக்கு அவை அளிக்கும் விளக்கம் மனதைச் சுடுகின்றது .
திருப்தி
அளிக்கும் சிகரெட்டின் பெரிய விளம்பரப் பலகை . உடல் நலத்திற்கு கெடுதி விளைவது
பற்றிய உபயோகமற்ற எச்சரிக்கை அதன் மூலையில் .
தினம் தினம்
காணும் அசைவில்லாத காட்சிகள் . அவற்றைவிடச் சுவையானவை அவற்றின் பின்னணியில் உலவும்
மனிதர்கள் .
பஸ் ஷெல்டரின்
மூலையில் இருக்கும் கம்பத்தில் சாய்ந்து நிற்கும் பச்சைப் புடவை . இளம்பெண்
.கல்லூரிப் பெண் . அருகில் நின்று கொண்டு வலது கை அவள் தோளில் உரச கம்பத்தைப்
பிடித்துக் கொண்டிருக்கும் வாலிபன் . அவர்களுக்கிடையே மெல்லிய குரலில் நடை
பெற்றுக் கொண்டிருக்கும் முடிவில்லாத உரையாடல் . இடை இடையே பிறக்கும் அடங்கிய
சிரிப்பு .
அடிக்கடி
அவர்களைத் திரும்பிப் பார்த்தவாறே தனக்குள் எதோ பேசிக் கொள்ளும் வயதானவர் . கையில்
குடை , மாத ஜோதிடம் . ரிட்டையர்ட் லைஃபைக் காட்டும் முகம் . அவரிடம் ஏற்படும்
உணர்ச்சிகளின் பரிமாணம் எனக்குப் புரியவில்லை .
தலைமுறை
வித்தியாசம் உருவாக்கிய வெறுப்பாக இருக்கலாம் . அவள் வயதில் தனக்கிருக்கும் மகள்
இதே நேரம் இதே போல எவனுடனாவது நின்று கொண்டிருப்பாளோ என்ற பயமாக இருக்கலாம் .
பார்வையைத்
திருப்புகின்றேன் .
வாரப்படாத
தலைமுடி , ஷேவ் பண்ணாத தாடி , மீசை , டெனிம் , அலட்சியமாக ஜீன்ஸூள் செருகப்
பட்டிருக்கும் சட்டை , கண்களில் ஒளியில்லாத விரக்தி , கையில் ‘ நீட்ஷேயின்
கடிதங்கள் ‘ . தன் மீது மோதி திரும்பும் பார்வைகளின் வெறுப்பைக் கண்டு கொள்ளாமல்
இடைவிடாமல் புகையும் சிகரெட்டோடு , உடம்பை தளர்த்தி சுவரில் சாய்ந்து நின்று
கொண்டிருக்கும் இவனை கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த நாளிலிருந்தே இந்த பஸ்
ஸ்டாப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
அப்போதெல்லாம்
‘ ரேமன்ஸ் ‘ விளம்பரத்தில் இருந்து கிளம்பி வருவது போல இருப்பான் . கவலைப் படுவது
எப்படி என்று ஒரு ஸிம்போஸியமே நடத்தினால் கூட அவனுடைய மகிழ்ச்சி குறையாது என்பதைப்
போல அவ்வளவு கலகலப்பாக இருப்பான் .
அவனுடைய
மாற்றத்தை விடாமல் கவனித்துக் கொண்டுவரும் எனக்கு அவன் மனதின் பிரளயம் நன்றாகப்
புரிகின்றது .
” என்ன மச்சி ! நேத்து இண்டர்வியூவிற்குப் போனியா
? “ இந்தக் கேள்வி அவனிடம் கேட்கப்படுவதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன் .
“ எஸ் “ அமைதியான பதில் . இதுவும் வழக்கமானதுதான் .
“ இப்படியேவா போனே ? “
பதிலாக வரும் அவன் வார்த்தைகள் சுற்றி நிற்பவர்களைப் பாதிக்கின்றது .
தங்களது சமூக நியதிகளை அவன் தாண்டி ஓடுவதைப் போல அவனைப் பார்க்கிறார்கள் .அப்படி ஓடத்தான்
விரும்புகின்றேன் என்பதைப் போல அவன் அதே அலட்சியத்துடன் புகையை உள்ளே இழுத்து
வெளியே விடுகின்றான் .
நான் பார்வையைத் திருப்புகிறேன் .
கடந்த காலத்தை மறைக்க முயலும் மலிவான அலங்காரங்களோடு , உடம்பின்
வளைவுகளாலும் செயற்கை சிரிப்பாலும் தனது தொழிலுக்கு விளம்பரம் செய்து
கொண்டிருக்கும் பெண் . அவளைப் பொறுத்த வரையில் இரவு – பகல் என்பதெல்லாம்
அர்த்தமில்லாத வார்த்தைகள். வாழ்வில் வயிற்றின் பங்கை நன்கு உணர்ந்தவள் .
சில சமயங்களில் அவள் கண்களில் தெரிவதைப் படிக்க முயல்வதுண்டு .
தெரிவதெல்லாம் அவற்றில் பளிச்சிடும் அழைப்புதான் .
நான் பார்வையைத் திருப்புகிறேன் .
“ ஹலோ , என்னது இது ? மிஸஸ் துர்க்காராம் பஸ்ஸிற்காக நிற்பது ஆச்சரியமா இருக்கே
! வண்டி என்னாச்சு ? “
நான் மிஸ்ஸ் துர்க்காராமைப் பார்க்கிறேன் . வயதின் மேல் ஏற்பட்ட பயம் அவள்
அலங்காரத்தில் தெரிகிறது . பஸ்ஸின் மீது ஏற்பட்ட கோபத்தில் பல்லவனைத் திட்டுவது
புரிகின்றது .
நான் பார்வையைத் திருப்புகிறேன் .
ஒரு மாற்றம் என் மனதை நெருடுகின்றது .
அந்த பஸ் ஷெல்டரின் மூலையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பூட் பாலிஷ்
முருகன் அந்த இடத்தில் இல்லை . பதிமூன்று வயதுதான் இருக்கும் . தன் உழைப்பால்
வாழ்கிறோம் என்ர பெருமிதத்தில் வறுமையை மறைக்க முயலும் முகம் . நான் அவனது
வாடிக்கைகளில் ஒருவன் .
இன்று அவனை வழக்கமான இடத்தில் காணாதது ஏதோ போல் இருக்கின்றது .என்னவாயிற்று
அவனுக்கு ?
மனதினுள் ஒரு நெருடல் .
நான் தினம் தினம் காணும் மனித சித்திரங்களில் அவன் சற்று வித்தியாசமானவன் .
அழகற்ற கான்வஸில் வரையப்பட்ட அழகான ஓவியம் . சத்தியசோதனையைப் படிக்காமலே
வாழ்க்கையை நேர் கோடு ஆக்கிக் கொண்டிருப்பவன் .
“ குட் ஈவினிங் ஸார் ! “
திரும்புகிறேன் . இடது கையில் கூடை . வலது கையில் ஒரு கடலைப் பொட்டலம் .
ராமு – ஒவ்வொரு மாலையும் நான் சந்திக்கும் இன்னொரு நேர்கோடு . சின்ன வயதில்
படிப்பை நிறுத்திவிட்டு கடலைக் கூடையோடு நகரத்தின் மூலைமூலையாகச் சுற்றிக்
கொண்டிருக்கும் இவனை நம்பி ஒரு குடும்பம் . சின்ன வயதில் எத்தனை பொறுப்புகள் .
அவன் நீட்டுகின்ற கடலையை வாங்கிக் கொள்கிறேன் .
“ முருகன் எங்கே ? “
“ காலைல போலீஸ் புடிச்சிட்டுப் போயிட்டாங்க ஸார் . “
“ நிஜமாவா ? “ என் மனதின் நெருடல் விரிகின்றது .
“ ஆமா ஸார் . ஒரு வாரமா வருமானமே இல்லைன்னு சொல்லி
அழுதான் . பிக்பாக்கெட் அடிக்கப் போறேன்னான் ... எவ்வளவோ சொல்லியும் கேட்கல . “
ராமு டெனிம் ஜீன்ஸிற்கு கடலையோடு புன்னகையையும் சேர்த்துக் கொடுக்கிறான் .
இன்னொரு கஸ்டமர் .
“ தாங்க்ஸ் ராமு ! “ டெனிம் ஜீன்ஸ் காசோடு நன்றியையும் அளிக்கிறான் .
ராமுவின் பார்வை மிஸஸ் துர்க்காராம் மீது பதிகின்றது . நகர்கிறான் .
“ கடலை சாப்பிடுங்கம்மா . “
“ நீ விற்கிற கடலையையா ? இப்படி பிளாட்பாரத்தில் விற்பதை எல்லாம் வாங்கித்
தின்னா ஊர்ல உள்ள வியாதியெல்லாம் வரும் . கொஞ்சங்கூட சுத்தமில்லாதவங்க . “
ராமு நகர்கிறான் . இளம் கால்களில் வேகம் .
அவனை வெறுப்பாகப் பார்த்துவிட்டு மிஸஸ் துர்க்காராம் காலியாக வரும் ஆட்டோவை
கை காட்டி நிறுத்துகிறாள் .
மாற்றத்திற்காக பஸ் பயணம் செய்ய வந்து , பொறுமை இழந்து போய் விட்ட நிலையில்
அவசரமாக ஆட்டோவை நோக்கி விரைகின்றாள். ஆட்டோவில் ஏறப் போகும் நேரத்தில் அவளை
நோக்கி இரண்டு மெல்லிய கைகள் நீளுகின்றன . வறுமை உடம்பெங்கும் தெரிய நிற்கும்
இந்நாட்டு செல்வம் ஒன்று . சகோதர இந்தியன் !
சுண்டி விடப் பட்ட நாணயம் ஒன்று உருண்டோடுகிறது . முழு நாலணா . மிஸஸ்
துர்க்காராமின் அலட்சியம் நாணயத்தின் ஒலியில் தெரிகின்றது . குனிந்து பொறுக்கும்
விரைவில் அந்தச் சிறுவனின் இல்லாமை தெரிகின்றது .
அந்த நாணயம் பொறுக்கப் படுவதற்கு முன்பே மிஸஸ் துர்க்காராமை நோக்கி நீளும்
மற்றொரு கை . மீண்டும் ஒரு நாணயத்தின் உருளல் . ஆட்டோ புறப்படுகின்றது . திரும்பி
சாலையின் வாகன வெள்ளத்தில் கலந்து மறைகின்றது .
என் மனதில் நெருடல் அதிகமாகின்றது . சட்டத்தின் பிடியில் முருகன்
தெரிகின்றான் . தூரத்தில் நேர்கோடாகச் சென்று கொண்டிருக்கிறான் ராமு. இந்த நேர்கோடும் உருவம் மாறிவிடலாம் , இல்லை
மாற்றப்பட்டு விடலாம்.
பிறரின் இரக்கத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் வரிசையைப் பார்க்கிறேன் .
மிஸஸ் துர்க்காராமிடம் நாலணா பெற்ற சகோதர இந்தியர்கள் , வலது கையில் பாதி இல்லாத
ஒருவன் , கடந்த காலத்தின் சுவடுகள் முகத்தில் புண்களாக மாறிய பெண் , எதிரில்
விழும் நாணயங்களையும் பக்கத்தில் வரும் மனிதர்களையும் மட்டுமே பார்க்க முடிகின்ற
ஒரு குருடன் . வரிசை நீள்கின்றது . பின்னால் சுவரில் ஏதோ ஒரு ஆண்டின் இலட்சிய
வரிகள் நிறம் மாறித் தெரிகின்றது . ’இவர்களுக்குத் தேவை ஊக்கம் , இரக்கம் அல்ல .’
முருகனும்
அந்தப் பெண்ணும் இவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டுத் தெரிகிறார்கள் . அவர்கள்
உரு மாறியவர்கள்தான் . ஆனால் சமூகத்தின் இரக்கத்தை நம்பி வாழாமல் தங்கள் மன
வலிமையால் வாழத் துணிந்துவிட்ட சுயமரியாதைக்காரர்களாகத் தெரிகிறார்கள் . எங்கோ
படித்த வரிகள் நினைவில் மோதுகின்றன . சமுதாயம் குற்றங்களை உருவாக்குகிறது . குற்றவாளிகள்
அவற்றை செய்து முடிக்கிறார்கள் .
உண்மைதான் .
இவர்கள் உருவாகவில்லை . உருவாக்கப் படுகிறார்கள் .
“ ஏ சமுதாயமே !
உன்னிடம் இருந்து உருண்டோடும் நாணயங்கள் உண்மை உழைப்பிற்கு கூலியாக மாறட்டும் .
சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்கும் போலி கௌரவமாக இருக்க வேண்டாம் . “
மனதின் குரல்
வலியை ஏற்படுத்துகிறது .
“ உன் வக்கிர
எண்ணங்களால் நேர்கோடுகளை உருமாற்றி சிதைத்து விடாதே . அவர்களும் மனிதர்கள்தான் .
சத்திய சோதனையை வாழ்க்கையாக்கிக் கொள்ள அவர்கள் மகாத்மாக்கள் இல்லை . “
டெனிம் ஜீன்ஸ்
கையில் சிகரெட்டோடு அப்படியே நின்று கொண்டிருக்கிறான் . மனதின் குமுறல் சிகரெட்
புகையாக வெளியேற வெறித்த பார்வையோடு நின்று கொண்டிருக்கிறான் .
அன்றைய
வருமானத்தை அளிக்கப் போகும் எவனோ ஒருவனுடன் அந்தப் பெண் பக்கத்துச் சந்தில்
மறைகிறாள் . நான் வந்து நிற்கும் பஸ்ஸில் ஏறிக் கொள்கிறேன் .
-----------
------------ ------------ -------------
“ வட்டங்கள் –
சதுரங்கள் – முக்கோணங்கள் “ என்ற தலைப்பில் நடத்தப் பட்ட சிறுகதைப் போட்டியில்
பிரசுரத்திற்கு தேர்வாகி 20. 05 .1983 தேதியிட்ட தினமணி கதிர் வார இதழில் வெளிவந்த
எனது சிறுகதை .
------------------------------------------------------------------------------------------------------
வெள்ளி, 10 அக்டோபர், 2014
காலத்திரயம்
காலத்திரயம்
நேற்று
நடந்ததைப் பேசிப் பேசியே
வயதாகி விட்டது .
இன்றைய தினத்திலும்
நேற்றைய தினத்தைத்
தோண்டுவதால்
இன்று என்பதே
இல்லாமற் போயிற்று .
நாளைய தினத்திலும்
நேற்றைய தினமே
தூவப்படும் என்பதால்
நாளையும் இல்லாமல்
போய்விடக் கூடும் .
எனினும் ...
எப்போதும் ...
நேற்று
என்பது இனிமைதான் .
[ புதுப்புனல் நவம்பர் 2013 ]
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)