வியாழன், 2 மார்ச், 2023

மணலும் , மணல் சரிந்த இடங்களும் .....

 

மணலும் , மணல் சரிந்த இடங்களும் ..... 



என்ன வேலண்ணே ....இங்கே படுத்துக் கிடக்கீக . அங்கே அண்ணாச்சி உங்களைக் காலையில இருந்தே வலை போட்டுத் தேடிக்கிட்டு இருக்காக . போனையும் எடுக்க மாட்றிகங்கன்னு சத்தம் போட்டுட்டு கிடக்காக . எப்படியாவது கண்டு பிடிச்சுக் கூட்டிட்டு வாலேன்னு என்னை அனுப்பி வச்சாக. நானும் காலையில இருந்தே ஊரு முழுக்கச் சுத்திட்டு எங்கேயும் காணாம எதுக்கும் பார்ப்போமின்னுதான் இங்கே வந்தேன் . நீங்க என்னடான்னா செல்லி அம்மன் கோவில் ஆலமரத்தடியில இப்படி துண்டை விரிச்சு ஹாயாத் தூங்கிட்டு இருக்கீக . சரி , கெளம்புங்க . அண்ணாச்சி கையோட கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காக . “ சின்னத்துரை மூச்சு விடாமல் பேசி முடித்தான் .

வேலு எழுந்து துண்டை உதறினான் .

“ நாலு நாளா நாள் முழுக்க அலைஞ்ச களைப்புடா . ராத்திரி லேட்டாத்தான் தூங்கினேன் . காலையில நேரமா எழுந்திரிச்சு நாலு இட்லியத் தின்னுட்டு கிளம்பினேன் . அசதியில கொஞ்ச நேரம் படுக்கலாம்னு படுத்தேன் . ஆலமரத்து காத்து இதமா இருந்திச்சு . அப்படியே கண்ணசந்திட்டேன் . நீ போ , நான் வந்திடுதேன் . “

“ நீங்க கிளம்புங்க . நான் நிற்கிறேன் . அண்ணாச்சி உங்களைக் கையோட கூட்டீட்டு வரச் சொல்லியிருக்காக . தனியாப் போனா ஏச்சு விழும் . அதோட நான் நடந்துதான் வந்திருக்கேன் . உங்க வண்டியிலயே வந்திடறேன் . “

வேலு கிணற்றுப் பக்கம் இருந்த தொட்டியில் இருந்து தண்ணீரைக் கையில் அள்ளி முகத்தைத் துடைத்துக் கொண்டான் . துண்டால் ஈரம் போக துடைத்தான் . தள்ளி நிறுத்தியிருந்த பைக்கைக் கிளப்பினான் . சின்னத்துரை பின்னால் ஏறிக் கொண்டதும் வண்டியை உதைத்துக் கிளப்பினான் .

“ அண்ணாச்சி ஏன்னே இப்படி உங்களைத் தேடுதாக ? அவரு இவ்வளவு கோவப்பட்டு நான் பார்த்ததில்லை . நீங்க போனைக்கூட எடுக்கலைன்னுதான் ரொம்ப சத்தம் போடுதாக . “

வேலு எதுவும் பேசாமல் வண்டியை மிதமான வேகத்தில் ஓட்டினான் . வெயில் நன்றாக உறைத்துக் கொண்டிருந்தது .

                        *

வண்டியை அண்ணாச்சி வீட்டின் முன் நிறுத்தியதும் சின்னத்துரை இறங்கி உள்ளே போனான் .

“ என்னல தனியா வாற ... வேலு வரலியா ? “ உள்ளிருந்து வந்த அண்ணாச்சியின் குரலில் பதட்டம் தெரிந்தது .

“ கண்டு பிடிச்சுக் கையோட கூட்டிட்டுதான் வந்திருக்கேன் அண்ணாச்சி . “ துரையின் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது .

வேலு வண்டியை நிழலில் நிறுத்தி விட்டு உள்ளே போனான் .

“ எங்கேடே போயிட்டே வேலு ? என்னாச்சு , இடம் கண்டு பிடிச்சியா இல்லியா ? “ அண்ணாச்சியின் குரலில் பதட்டம் தணியவில்லை . “ போன் போட்டாலும் எடுக்கல . என்னடே ஆச்சு ? உடம்பு கிடம்பு சரியில்லயா ? சரி  , உட்காரு முதல்ல . துரை , உள்ளே போய் மோரு இருந்தா வாங்கிட்டு வா .வேலு களைப்பா இருக்க மாதிரி இருக்கு . “  துரை வீட்டிற்குள் போனான் .

“ என்ன வேலு , ஏதாவது தோதான இடம் கிடைச்சுதா இல்லியா ? இன்னும் ஒரு வாரத்துக்குதான் லோடு தேறும்னு தவசி சொன்னான் . அதுக்குள்ள இடம் பார்த்து மத்த ஏற்பாடுல்லாம் பண்ணினாத்தான் தொடர்ந்து சரக்கு அனுப்ப முடியும் . “ அண்ணாச்சியின் குரலில் பதட்டம் கொஞ்சம் தணிந்திருந்தது .

“ நானும் ஒரு வாரமா ஒரு இடம் விடாம அலைஞ்சு தேடிட்டேன் அண்ணாச்சி . தொடர்ந்து அள்ளுற மாதிரி தோதான இடம் எதுவும் கண்ணில படல அண்ணாச்சி . எல்லா இடத்திலயும் நாமளும் எதிர் பார்ட்டியும் தோண்டி எடுத்த பள்ளம்தான் இருக்கு . மணல் கண்ணில படற எடத்தில ஒரு அடி அல்லது ரெண்டு அடிதான் இருக்கு . “ வேலுவின் குரல் மெல்லியதாக ஒலித்தது .

“ என்னடே இப்படிச் சொல்லறே . எங்கேயிருந்தாலும் மோப்பம் பிடிச்சுடற நீயே இப்படிச் சொன்னா எப்படி . எங்கேயாவது தோதான இடம் இல்லாமயா போயிடும் ? “ அண்ணாச்சியின் குரலில் மீண்டும் பதட்டம் .

“ ஏன் அண்ணாச்சி , நான் என்னைக்காவது அரைகுறை வேலை பார்த்திருக்கேனா ? அந்தக் கோடியில இருந்து இந்தக் கோடி வரைக்கும் தேடி அலைஞ்சுட்டேன் . தோதான இடம் ஒன்னும் கண்ணில படல . அதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியாமத்தான் போனையும் எடுக்கல . இன்னும் ரெண்டு மூனு இடம்தான் பாக்கியிருக்கு . அதையும் பார்த்துட்டுப் பேசிக்கலாம்னுதான் இருந்தேன் . ஆனால் அந்த இடத்துக்கெல்லாம் வண்டி கொண்டு போக தோதுப் படாதுன்னுதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் . “ 

“ அதெல்லாம் பார்த்துக்கிடலாம் . நீ போய் தொடர்ந்து அள்ளுற அளவுக்கு மணல் இருக்கான்னு மட்டும் பார்த்துட்டு வந்து சொல்லு . அது போதும் . எதிர் பார்ட்டிக்காரன் இடத்தில இன்னும் ஒரு மாசம் சரக்கு எடுக்கலாம் போல இருக்குன்னு தவசி சொன்னான் . விட்டுட்டோம்னா நம்ம பார்ட்டியை எல்லாம் அவன் வளைச்சுப் போட்டுருவான் . உனக்குத் தெரியாதது இல்ல . இந்தத் தொழில்ல இடத்தை விட்டுட்டா திருப்பிப் பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு . அதோட பத்து ஜேசிபி , முப்பது லாரிகளும் சும்மா நின்னா வட்டி இதுவரைக்கும் சம்பாதிச்சதையெல்லாம் தின்னுடும் . எப்படியாவது இடத்தைக் கண்டு பிடி . வழியெல்லாம் எப்படியாவது சரி பண்ணிக்கலாம் . “

துரை சொம்பு நிறையக் கொண்டு வந்த மோரை வாங்கிக் குடித்தான் வேலு . ஜில்லென்ற மோர் உள்ளே இறங்கியதும் உடம்பு குளிர்ந்தது போல இருந்தது .

“ சரி நீ கிளம்பு . இந்தா செலவுக்கு வச்சுக்க . “ அண்ணாச்சி அருகில் இருந்த தோல் பையில் இருந்து நூறு ரூபாய் கட்டில் இருந்து பாதியை அவனிடம் கொடுத்தார் . “ காத்துக்கிட்டே இருப்பேன் . இடம் பார்த்ததும் சொல்லு . நானும் வந்து பார்த்துட்டு மத்த வேலையைப் பார்த்துடுவோம் . “

வேலு தயக்கத்துடன் பணத்தை வாங்கி சட்டையின் உள் பைக்குள் வைத்துக் கொண்டு வெளியே வந்தான் . வண்டியைக் கிளப்பியவன் போகும்போதே எந்தப் பக்கம் போவது என்று யோசித்தவாறே சென்றான் . இன்னும் நாலைந்து இடங்கள்தான் பாக்கி .

                     *


நாலு நாளாக மணல் உள்ள இடம் தேடி அலைந்தபோது பார்வையில் பட்ட ஆற்றின் நிலை அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது . மணல் இருந்த இடமெல்லாம் பாறைகள் கண்ணில் படும் அளவிற்கு மணலற்றுப் போயிருந்தன . எல்லாம் அண்ணாச்சியும் , எதிர் பார்ட்டியும் சேர்ந்து செய்த மணல் வியாபாரம்தான் காரணம் என்பது அவனுக்குத் தெரியும் . பேசாமல் அண்ணாச்சியிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது அந்தத் தொழிலில் இருந்து வெளியேறி விடலாமா என்றுதான் நாலு நாட்களாகவே யோசித்துக் கொண்டிருக்கிறான் . மணல் அள்ளும் அந்தத் தொழில் மூலம் ஒன்றுமில்லாமல் இருந்த அண்ணாச்சியும் , எதிர் பார்ட்டியும் இன்று கோடீஸ்வரர்களாகி விட்டது ஊரறிந்த விஷயம்தான் . அவர்கள் இருவர் மட்டுமில்லை , அவர்களிடம் வேலை பார்க்கும் தன்னைப் போன்றவர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தற்கும் காரணம் மணல்தான் என்ற உண்மை அவனை முடிவெடுக்க விடாமல் வைத்திருந்தது . இதை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போய் அதன் மூலம் இவ்வளவு சம்பாத்தியம் கிடைக்குமா என்ற அச்சமும் மனதில் இருக்கத்தான் செய்தது .

வண்டியோடு சேர்ந்து மனதிற்குள் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன . அவனை அறியாமலே வண்டி சொல்லூர் விலக்கிற்கு வந்து விட்டது . இன்னும் தேடாத இடங்கள் அந்தப் பகுதியின் உள்ளேதான் இருந்தன . இஸ்மாயில் கடை எதிரில் நிறுத்தி இறங்கினான் . இஸ்மாயிலும் , கடையில் இருந்த சிலரும் அவனைப் பார்த்ததுமே சிரிப்போடு விசாரித்தார்கள் . அவனது தொழில் காரணமாக அவனைத் தெரியாதவர்கள் சிலர்தான் இருப்பார்கள் .

அவன் கேட்காமலே இஸ்மாயில்  சூடான டீயை நீட்டினான் . டீயில் இஞ்சி சுவை தூக்கலாக இருந்ததை ரசித்துக் குடித்தவாறே அன்று பார்க்க வேண்டிய இடங்களைக் குறித்து யோசித்தான் வேலு .

உள்ளே தள்ளி உள்ள இடங்கள் . போனால் திரும்ப சாயங்காலம் ஆகிவிடும் . சாப்பாட்டிற்கு திரும்பி வந்தால் நேரம் வீணாகலாம் .

“ இஸ்மாயில் ...பிரியாணி ரெடியாயிட்டுதா . இருந்தால் ஒரு பொட்டலம் கட்டு . சம்பல் கொஞ்சம் கூடுதலா வச்சுக் கட்டு . “

இஸ்மாயில் கொடுத்த பொட்டலத்தை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி விலக்கில் இருந்து ஆற்றுக்குப் போகும் பாதையில் செலுத்தினான் . உள்ளே ஊர் எதுவும் இல்லாததால் மண் தடம்தான் . சமீபத்திய மழையால் குண்டும் குழியுமாகக் கிடந்த பாதை இரண்டு மைல் தாண்டி ஆற்றங்கரையில் இருந்த சுடுகாட்டை அடைந்தது . சுற்று வட்டாரம் முழுவதற்கும் அதுதான் சுடுகாடு .

வண்டியை நிறுத்தி இறங்கியபோது அந்த ஜீப் கண்ணில் பட்ட்து . குடிநீர் வாரிய ஜீப் . கொஞ்சம் தள்ளி நின்று புகைத்துக் கொண்டிருந்த ஓட்டுநர் வேலுவிற்கு பழக்கமானவர்தான் .

“ என்ன சார் ... இந்தப் பக்கம் ? “

“ ஏ ஈ உள்ளே புரோபிங் போட்டு பார்த்துக்கிட்டிருக்காரு . நீங்க என்ன இந்தப் பக்கம் ? “ ஓட்டுநர் வேலுவிடம் இருந்து பதிலை எதிர்பாராமல் பதில் சொன்னார் .

“ எந்தப் பக்கம் இருக்காரு சார் ? “ பொறியாளரும் வேலுவிற்கு தெரிந்தவர்தான் . புரோபிங் போடுகிறார் என்றால் மணல் இருக்கின்றது என்பது வேலுவிற்குத் தெரியும் .

“ இந்தப் பக்கம்தான் . ஒரு அரை மைலு உள்ளே . “ ஓட்டுநர் கை காட்டிய திசையில் நடந்தான் வேலு . ஆற்றில் ஒரு ஓரமாக வழக்கத்தைவிட அதிகமாக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது . மழைதான் காரணம் . பரவலாக மணல் கண்ணில்பட்டது .

ஓட்டுநர் சொன்னது போலவே அரை மைலில் குடிநீர் வாரிய பொறியாளர் நின்று கொண்டிருந்தார் . நாலைந்து ஆட்கள் இரும்புக் கம்பிகளை மணலில் சொருகிச் சொல்லிக் கொண்டிருந்த அளவுகளை கையில் இருந்த நோட்டில் குறித்துக் கொண்டிருந்தார் .

“ வணக்கம் சார் . என்ன ஏதாவது புதுத் திட்டம் வருதா ? “

வேலுவின் குரல் கேட்ட்தும் திரும்பினார் .

“ வாங்க.... ஆமாம் ஒரு நானூறு ஊர்களுக்கு ஒரு திட்டம் போடச் சொல்லியிருக்காங்க . எப்படியும் இருபது கிணறாவது போடணும் . இங்கே மட்டும்தான் கொஞ்சம் மணல் இருக்கு . மத்த இடம் பூராவுந்தான் நீங்க.. “ பொறியாளர் பாதியில் நிறுத்திக் கொண்டார் . வேலுவையும் , அண்ணாச்சியையும் நன்கு தெரிந்தவர் .

“ இங்கே மணல் நிறைய இருக்கோ ? “ வேலுவின் கேள்வி அவருக்குப் புரிந்து விட்டது .

“ ஆமாங்க . கிணறு போடற அளவிற்கு இங்கே மட்டும்தான் இருக்கு . சுமாரா பதினைந்து லட்சம் பேருக்கான திட்டம் . கிணறு போட இடம் கிடைக்கலைன்னா திட்டம் ரத்தாயிடும் . தயவு செஞ்சு இந்த இடத்தில மணல் எடுக்க திட்டம் போட்ராதீங்க . “

“ நானும் மணல் தேடிதான் அலையறேன் . ஆனால் நீங்க இப்படிச் சொல்றப்ப எப்படி பண்ணுவோம் . பயப்படாதீங்க . “ வேலுவின் மனதில் இருந்துதான் வந்தன வார்த்தைகள் .

“ இங்கேன்னு இல்லை , இந்தப் பக்கத்திலேயும் கை வச்சிடாதீங்க . குடிநீர் கிணறுக்கு ஐநூறு மீட்டர் சுத்துல மணல் எடுக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு . ஆனால் எங்கே விடறாங்க . ஒன்னுமில்லை , உங்க ஏரியாவுக்கு குடிநீர் வழங்க நாலு வருஷம் முன்னாடி போட்ட திட்ட்த்தில கிணறு வேலைகளை நான்தான் பார்த்தேன் . கிணறு போட்டப்ப பதினைந்து அடி ஆழம் மணல் இருந்துச்சு . ஒவ்வொரு கிணறும் நிமிஷத்திற்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுத்துச்சு . இப்ப பாருங்க சுத்திலும் மணலை எடுத்திட்டதால வெறும் அஞ்சடிதான் மணல் இருக்கு . நீர் சுரப்பும் பாதியாயிடுச்சு . ‘ பொறியாளரின் குரலில் வருத்தம் தொனித்தது .

“ சார் நீங்க இவ்வளவு சொன்னப்புறம் இந்தப் பக்கம் எப்படி வருவோம் . சரி , இந்த திட்டம் பாதிக்காதவகையில வேறு இடம் இருந்தாச் சொல்லுங்களேன் . அண்ணாச்சி துளைச்சு எடுக்கிறாரு .

சற்று நேரம் யோசித்தார் பொறியாளர் . “ சரி , ஒன்னு பண்ணுங்க . இன்னும் மேல இரண்டு கிலோ மீட்டர் போனிங்கன்னா ஆயிரம் அடி தூரத்திற்கு ஏழெட்டு அடி மணல் பரவலா இருக்கு . அதில எடுத்திங்கன்னா இந்தத் திட்டத்திற்குப் பாதிப்பு இருக்காது . தயவு செய்து இந்தப் பக்கம் வரவேண்டாம்

வரமாட்டோம் சார் . ரொம்ப நன்றி . நான் போய் அந்த இடத்தையே பார்க்கிறேன் . வரட்டுமா ? “ வேலு அவர் சொன்னதுபோல ஆற்றின் மேல்புறம் நோக்கி நடந்தான் . அந்த இடத்திற்கு வண்டியில் போக முடியாது . மணல் சூடாகிப் போயிருந்ததால் செருப்புகளையும் மீறி சூடு தாக்கியது .

அவர் சொன்ன இடத்திற்கு வருவதற்குள் வேலு சோர்ந்து போனான் . ஆனால் பரந்து கிடந்த மணல் கொடுத்த திருப்தியில் சோர்வு காணாமல் போனது . இடுப்பில் சொருகியிருந்த அருவாளை எடுத்து நாலைந்து க்ருவேலங்குச்சிகளை வெட்டி முனையைக் கூராக்கினான் . பரவலாக குச்சியைச் சொருகிப் பார்த்தான் . பொறியாளர் சொன்னதுபோல ஏழெட்டு அடிகளுக்கு மணல்தான் . இது போதும் இப்போதைக்கு . ஆறு மாதங்கள் தாக்குப் பிடிக்கும் . ஆயிரம் அடி தூரத்திலும் குச்சி சொருகிப் பார்த்து முடித்தபோது உச்சியாகி விட்டது . கைகளைக் கழுவி விட்டு நிழல் பார்த்து உட்கார்ந்து பொட்டலத்தைப் பிரித்து வைத்து பிரியாணியைச் சாப்பிட்டதும் தெம்பு மீண்டு விட்ட்து . அந்த இடத்திலேயே துண்டை விரித்து ஒரு குட்டித் தூக்கம் போட்டான் .

தூக்கம் கலைந்து எழுந்தபோது வெக்கை தணிந்திருந்தது . இனி அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் . ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள ஊர்களைப் பார்த்து வண்டிகளைக் கொண்டுவர வழி தோது பண்ண வேண்டும் . அதுதான் முக்கியம் . இரு பக்கம் உள்ள பகுதிகளைப் பார்வையிட்டு , விசாரிப்புகளை முடித்தபோது மாலை ஆகிவிட்டது .

கரை ஓரமாகவே நடந்து வண்டி நிறுத்தியிருந்த இடம் அடைந்தபோது ஜீப்பைக் காணவில்லை . வண்டியில் ஏறிக் கிளம்பி மீண்டும் இஸ்மாயில் கடையில் நிறுத்தினான் . டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சாமி வந்தான் . அண்ணாச்சிக்கு வேலு எப்படியோ அதே போல எதிர் பார்ட்டிக்கு சாமி . அண்ணாச்சியும் , எதிர் பார்ட்டியும் அந்த தொழிலில் மட்டும்தான் எதிர் எதிர் . மற்ற விஷயங்களில் அவர்களுக்குள் எந்தப் பகையும் கிடையாது . ஒன்னுக்குள் ஒன்னுதான் . அதேதான் வேலுவிற்கும் சாமிக்கும் ஆன உறவும் .

என்ன சாமி ...இந்தப் பக்கம் ? “

சாமியும் டீயை வாங்கிக் கொண்டதும் இருவரும் சற்று ஓரமாக ஒதுங்கினார்கள் .

உங்கிட்ட சொல்றதுக்கென்னண்ணே . நம்ம ஏரியாவில இன்னும் பத்து நாளைக்குதான் மணல் தேறும் . வேற இடம் பாரு , பாருன்னு நச்சரிக்காரு நம்மாளு . நானும் நாயா பேயா அலையறேன் . எங்கே பார்த்தாலும் நாம தோண்டிப் போட்ட பள்ளம்தான் கண்ணில படுது . மணலுக்கு எங்கே போறதுன்னு புரியாமதான் அலைஞ்சுட்டிருக்கேன் . “ சாமியின் குரலிலும் சலிப்பு தெரிந்தது .

நம்ம பாடும் அதுதான் . “ வேலு அடக்கியே வாசித்தான் . வாயை விட்டு இடத்தை விட்டு விடக்கூடாது என்ற உள்ளுணர்வுடன் .

                         *

அண்ணாச்சியின் வீட்டை அடைந்தபோது துரை வெளியில் நின்று கொண்டிருந்தான் .

அண்ணாச்சி உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்துட்டு இப்பதான் ....துரை கை சைகை காட்டியதைப் புரிந்து கொண்டான் வேலு .

அண்ணாச்சி அடிக்கடி தண்ணி அடிக்க மாட்டார் . எப்போதாவதுதான் , அதுவும் வீட்டில் தனியாகத்தான் .

அப்ப நான் போயிட்டு காலையில வாறேன் . “

அய்யய்யோ ... நீங்க எப்ப வந்தாலும் உள்ளே வரச் சொன்னார் . “ துரை பதறினான் .

வேலு உள்ளே போனபோது அண்ணாச்சி சோடா பாட்டிலைத் திறந்து கொண்டிருந்தார் . வேலுவைப் பார்த்ததும் சோடா பாட்டிலை எதிரில் பொன்னிற திரவம் நிரம்பிய கண்ணாடி தம்ளர் அருகில் வைத்தார் .

என்னடே ஆச்சு வேலு ... “

இடம் பார்த்துட்டேன் அண்ணாச்சி . ஒரு ஆயிரம் அடி தூரத்துக்கு ஏழெட்டு அடி மணல் இருக்கு . ஆறு மாசம் வரும் . “

அண்ணாச்சியின் முகத்தில் தெளிவு தெரிந்தது .

அதானே , வேலுன்னா சும்மாவா ? சரி , விவரமாச் சொல்லு . “

வேலு இடம் குறித்த விபரங்களைச் சொன்னான் . மிக கவனமாக அந்தப் பொறியாளரைப் பார்த்ததைத் தவிர்த்துவிட்டு .

ஆனால் ஒரே ஒரு சிக்கல்தான் அண்ணாச்சி . ரெண்டு பக்கமும் வயல்தான் இருக்கு . வண்டி உள்ளே போறதுதான் சிரமம் .

அதெல்லாம் வழிக்கு கொண்டு வந்திடலாம் . யாரு வயலுன்னு விசாரிச்சியா ? “

விசாரிச்சிட்டேன் அண்ணாச்சி . எல்லாமே எதிர் பார்ட்டிக்கு வேண்டிய ஆளுங்க . அதான் சிக்கல் . “

அண்ணாச்சி சிறிது நேரம் பேசவில்லை .

அப்புறம் வழியில அந்த சாமிப்பயலைப் பார்த்தேன் . அவங்களுக்கும் இன்னும் பத்து நாளைக்குதான் தேறுமாம் . அவங்களும் வேற இடம் தேடித்தான் அலையறானுக .

அவன்கிட்ட இதைப் பத்திச் சொல்லிட்டியா ... “ அண்ணாச்சி பதறினார் .

சொல்லுவேனா நான் . எனக்கு ஒரு யோசனை தோணுது . பேசாம அந்த பார்ட்டிக்கிட்ட நேராப் பேசிடுங்க அண்ணாச்சி . ஆளுக்குப் பாதியா பிரிச்சுக்கலாம் . அவரை வச்சுப் பேசி வழியும் தோது பண்ணிடலாம் . “

அதுவும் சரியாத்தான்படுது . ஒன்னுமில்லாமப் போறதுக்கு இது பரவாயில்லைன்னு அவனும் ஒத்துக்குவான் . இந்தா இப்பவே பேசிடறேன் . ” . அண்ணாச்சி அருகில் இருந்த போனை எடுத்து எண்களை அனுப்பினார் . வேலு சற்று தள்ளி நின்று கொண்டான் .

பத்து நிமிஷங்கள் பேசிவிட்டு போனை கீழே வைத்தார் .

“ சரின்னுட்டான் வேலு . நாளைக்கு காலையிலயே போய் இடத்தைப் பார்த்துட்டு அடுத்த வேலைகளில் இறங்கிடலாம்னு சொல்லிட்டான் . “

“ அப்ப கொஞ்சம் விடியலிலேயே கிளம்பிடுவோம் . வெயில் ஏறிட்டுதுன்னா ஆத்தில நடக்கறது சிரமம் ..

அதெல்லாம் சொல்லிட்டேன் . சரி , நீ போயிட்டு காலையிலயே வந்திடு . அப்படியே வெளியே வண்டியில ஸ்டீபன் இருந்தா அவனையும் இப்ப போயிட்டு காலையில சீக்கிரமா வரச் சொல்லிடு . “ அண்ணாச்சி மீண்டும் சோடா பாட்டிலைத் திறந்தார் . சற்று உற்சாகத்துடன் இருப்பதாக வேலுவிற்குத் தோன்றியது .

சரி அண்ணாச்சி . “ சொல்லிவிட்டு வேலு வெளியே வந்தபோது இருட்டி விட்டிருந்தது . வண்டியில் உட்கார்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ஸ்டீபனிடம் விபரம் சொல்லிவிட்டு தன் வண்டியில் ஏறினான் . சரி வாரேன் துரை . “

போகும் வழியிலேயே லட்சுமிக்கும் , குழந்தைகளுக்கும் சேர்த்து டிபன் வாங்கிக் கொண்டான் . சாப்பிட்டவுடனேயே தூக்கம் வர அலாரம் வைத்துவிட்டு அசந்து  தூங்கிப் போனான் .

காலையில் எழுந்து லட்சுமியை எழுப்பி கதவைப் பூட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டு இருட்டிலேயே கிளம்பினான் . அண்ணாச்சி வீட்டை அடைந்தபோதும் சரியாக விடியவில்லை . ஸ்டீபன் வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்தான் . வேலுவின் வண்டி சப்தம் கேட்டு அண்ணாச்சியே வெளியே வந்துவிட்டார் . துரை உள்ளே போய் எடுத்துவந்த காபியைக் குடித்து விட்டு காரில் முன் பக்கம் ஏறிக்கொண்டான் வேலு . அண்ணாச்சி பின்னால் ஏறிக் கொண்டதும் ஸ்டீபன் காரைக் கிளப்பினான் .

விலக்கிற்கு வந்தபோது இலேசாக வெளிச்சம் வந்திருந்தது . இஸ்மாயில் கடையில் இருந்து சற்று தள்ளி நின்ற கார் அருகில் ஸ்டீபன் வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினான் .

நின்று கொண்டிருந்த காரில் உட்கார்ந்திருந்த எதிர்பார்ட்டி கண்ணாடியை இறக்கி விட்டார் . “ அப்ப போலாமா ? “

வேலு சொன்ன பாதையில் ஸ்டீபன் வண்டியை திருப்பினான் . அந்த காரும் பின் தொடர்ந்து வந்தது . சுடுகாட்டருகில் வந்து நின்ற போது நன்றாக வெளிச்சம் வந்திருந்தது . வேலுதான் முதலில் இறங்கினான் .

இனிமே நடந்துதான் போகணும் அண்ணாச்சி . “

அண்ணாச்சி இறங்கினார் . அடுத்த வண்டியில் இருந்து சாமிதான் முதலில் இறங்கினான் . தொடர்ந்து எதிர் பார்ட்டி இறங்கினார் . அந்தக் காலை நேரத்திலும் மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன் பொதுக் கூட்டத்திற்குப் போவது போல இருந்தார் .

என்னடே வேலு , நல்லாயிருக்கியா ? பார்க்கவே முடியல . “

இருக்கேன் ரெண்டு அண்ணாச்சி புண்ணியத்திலும் . நீங்க நல்லாயிருக்கீகளா ? “

உன்னை மாதிரி ஆளுங்கல்லாம் இருக்கும்போது நமக்கு என்ன குறை வரப் போகுது . “ அவர் பேச்சு மேடையில் பேசுவதுபோலவே இருந்தது .

அப்ப ஸ்டீபன் , நீங்க ரெண்டு பேரும் வண்டியிலயே இருங்க . யாராவது கேட்டா ஒன்னும் சொல்ல வேண்டாம் . “

நான்கு பேரும் மேல் பக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள் . வேலுதான் வழி காட்டினான் . சாமி அவன் கூடவே வந்தான் .தூரம் போகப் போக பின்னால் வந்தவர்கள் இருவருக்கும் சோர்வு ஏற்பட்டதை வேலுவால் உணர முடிந்தது . துணிப் பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை ஆளுக்கொன்றாக கொடுத்தான் .

இடத்தை அடைந்தபோது அண்ணாச்சிக்கும் அவருக்கும் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது . “ தூரம்தாண்டே வேலு . ஆனாலும் பொன்னு விளையற இடமாச்சே , நடந்துதானே ஆகணும் . “

வேலு நேற்று கரையில் ஒளித்து வைத்திருந்த சீவிய குச்சிகளை எடுத்தான் . சாமியும் அவனும் சேர்ந்து ஆற்றின் பல இடங்களிலும் குத்திக் காண்பித்தார்கள் . அன்ணாச்சி முகத்திலும் அவர் முகத்திலும் திருப்தி தெரிந்தது .

இடம் நல்லாத்தான் இருக்கு . ஆறு மாசம் தாங்கும் . என்ன சொல்லறே ? “ அண்ணாச்சி சொன்னதைக் கேட்ட அவர் தலையாட்டினார் .

ஆனால் , வண்டி வர தோது இல்லாம ரெண்டு பக்கமும் வயலுங்க . அதுவும் நல்லா விளைச்சல் உள்ள இடம் . தடம் போடறதுதான் சிரமம் . உன் கையிலதான் இருக்கு . வேலு விசாரிச்சிட்டான் . எல்லாமே உனக்கு வேண்டிய பார்ட்டிங்கதான் . எப்படியாவது பேசி இடம் பிடிச்சிட்டேன்னா இன்னும் ஆறு மாசம் கவலை இல்லை . “ அண்ணாச்சி நைச்சியமாகப் பேசினார் .

அதை நான் பார்த்துக்கிடறேன் . கவலையை விடுங்க . ஏரியாவை பாதிப் பாதியா பிரிச்சிக்கிடுவோம் . “

இடம் திருப்திதானே ரெண்டு பேருக்கும் . சரி , கிளம்புவோம் . இன்னும் வெயில் ஏறினா ஆத்தில நடக்கறது சிரமம்  தண்ணியும் சூடாயிடும் . “ வேலு கிளம்பலாம் என்பதுபோல கையை முன்னால் நீட்டினான் . இருவரும் நடக்க ஆரம்பித்தனர் .

அப்படியே ஓரமா தண்ணி ஓடற தடத்திலயே நடங்க . மணல் ரொம்ப சூடாயிட்டுது . செருப்புல்லாம் சூடு தாங்காது . “

இருவரும் வேலு காட்டிய தடத்தில் வேட்டியை சற்று உயர்த்திப் பிடித்தவாறு பேசிக் கொண்டே நடந்தனர் . அவர்கள் பேசிக் கொள்வது காதில் விழாத தூரத்தில் வேலுவும் , சாமியும் சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தனர் . தண்ணீரும் இலேசாக சூடாகத்தான் இருந்தது .

                        *

கிளம்பி கால் மணி நேரம் ஆகியிருக்கும் .

வேலு.... ஏய் ... வேலு..... “ மனதைப் பிளப்பதுபோல அண்ணாச்சியின் குரல் ஒலித்தது . கூடவே எதிர் பார்ட்டியின் குரலும் அதே தொனியில் .

முப்பதடி இடைவெளியில் பின் தொடர்ந்த வேலுவும் , சாமியும் அந்தக் குரல்லாலும் , முன்னால் கண்களில் பட்ட காட்சியாலும் அப்படியே உறைந்து போய் விட்டனர் .

சற்று முன் நிமிர்ந்து நடந்து கொண்டிருந்த அந்த இருவருடைய பாதி உடம்புதான் கண்ணில் பட்டது . இடுப்புக்குக் கீழ் மணலில் புதைந்திருந்தது போலத் தோன்றியது . சில விநாடிகளில் தலையும் , உயர்த்திய கைகளும்தான் பார்வைக்குத் தெரிந்தது .

வேலூ .... அப்படியே உள்ளே இழுக்குதுடா ... ஏதாவது கயிறு கட்டை இருந்தா எடுங்கடா .... ஏய்ய் ... வேலூ ...

தலை மட்டும் வெளியில் தெரிந்த நிலையில் இருவரின் கண்களிலும் மரணபயம் . கைகள் உதறிக் கொண்டிருந்தன .

வேலுவும் , சாமியும் ஓடிப் போய் அவர்களை நெருங்குவதற்குள் அந்த இடத்தில் சற்று முன்னால் இருவர் இருந்த அடையாளமே இல்லை . தலைகளும் , கைகளும் கூட மூழ்கி விட்ட நிலையில் அந்த இடத்தில் நீரில் இலேசான அசைவுகள் மட்டும்தான் கண்ணில் பட்டன .

கண் முன் நடந்ததைப் பார்த்த சாமி கண்கள் வெளியே பிதுங்கி உறைந்து போயிருந்தான் . அவன் உடல் உதறிக் கொண்டிருந்தது .

புதைகுழி இருந்திருக்கும் போல இருக்கு . இப்ப என்னடா பண்றது ? “ வேலுவின் குரலிலும் பதட்டம் .

சில விநாடிகளில் நீரில் காணப்பட்ட அசைவுகளும் அடங்கிவிட , ஆற்று நீர் மீண்டும் அதன்போக்கில் ஓடிக் கொண்டிருந்தது அந்த இடத்தில்.

செல்போனை எடுத்து ஸ்டீபனின் எண்களை அழுத்தியபோது வேலுவிற்கு ஆறும் , அதில் ஓடும் நீரும் , பரந்து கிடந்த மணலும் ஏதோ சொல்வது போலத் தோன்றியது .

குரலில் பதட்டத்துடன் விஷயத்தை சொல்லி முடித்த சில நிமிடங்களில் ஸ்டீபனும் , இன்னொருவனும் தூரத்தில் ஓடி வருவது வேலுவின் கண்களுக்குத் தெரிந்தது . ஆனால் மனதில் நேற்று அதே இடத்தில் மாட்டிக் கொண்டு காணாமல் போன அந்த மாட்டின் கடைசி நேர ஓலமும் , உதறல்களும் அவனை அறியாமலே வந்து போயின  . 



*************************************************************

                                      [ புதுப்புனல் மார்ச் 2016 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக