சனி, 31 அக்டோபர், 2015
வெள்ளி, 30 அக்டோபர், 2015
அவனும் நானும் .
அவனும் நானும் .
எதிரில் வந்தவனுக்கு
என் வயதுதானிருக்கும்
யாரென்றேன் .
உன்னைத் தெரிந்திருந்தால்
என்னையும் தெரிந்திருக்குமென்றான் .
எங்கேயோ கேட்டதாக
இருக்கிறதேயென்றேன் .
புதிர் வேண்டாம் புரியும்படிச்
சொல்லென்றேன் .
உற்றுக் கவனி
உன்னுள் என்னைக் காணலாம் .
என்னைக் கண்டுவிட்டால்
உன்னையும் நீ கண்டு கொள்ளலாமென்றான் .
உணர்ந்து காண்பதற்குள்
உருவமே இல்லாதவனாகி விட்டான் .
திரும்பிப் பார்க்கையில்
என்னையும் காணவில்லை .
என்னையோ அல்லது அவனையோ
யாரேனும் காண நேர்ந்தால்
சொல்லுங்கள் கட்டாயம்
என்னிடமோ அல்லது அவனிடமோ .
[ புதுப்புனல் ஜூலை – ஆகஸ்ட் 2015 ]
வியாழன், 29 அக்டோபர், 2015
செவ்வாய், 27 அக்டோபர், 2015
திங்கள், 26 அக்டோபர், 2015
” வல்லினம் நீ உச்சரித்தால் . ” [ ஒரு கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
” வல்லினம்
நீ உச்சரித்தால் . ” [
ஒரு கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
-------------------------------------------------------------------
” வல்லினம்
நீ உச்சரித்தால் “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – முகமது மதார் . [ 95970 69069 ]
வெளியீடு – வாசகன் பதிப்பகம் , சேலம் .
விலை – ரூபாய் 50 /
அறிமுக உரை – கவிஞர் ஆத்மார்த்தி .
முகமது மதார் எழுதுவதில் ஆர்வம் உள்ள
இளைஞர் . பொறியியல் பட்டதாரி . இவரது இந்தக் கவிதைத் தொகுப்பு அவர் கல்லூரியில்
படித்துக் கொண்டிருக்கும் போதே [ 2014 ] வெளியிடப் பட்டது என்ற எண்ணத்தை மனதில்
வைத்துக் கொண்டே வாசிக்கப்பட வேண்டியது . முதல் கவிதையில் தொடங்கி கடைசிக் கவிதை
வரை காதல்தான் கருப் பொருள் . அதிலும் பொதுப்படையான காதல் கவிதைகள் அல்ல . காதலியை
முன்நிறுத்தி வைத்து எழுப்பப்படும் ஒரு இளைஞனின் மனக்குரலாகவே இருக்கிறது . [ சங்க
காலப் பாடல்களில் தோழியை முன்நிறுத்துவது போல ] அதனாலேயே வாசிக்கும் போது ஒரு
கவிதைத் தொகுப்பு என்பதையும் மீறி , காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் இரகசிய
நாட்குறிப்பை அவனறியாமல் படிக்கும் உணர்வுகள் எழுவதைத் தடுக்க இயலாது .
“ வல்லினம் நீ உச்சரித்தால்
மெல்லினமாய் மாறுதடி !
மெல்லினம் நீ உச்சரித்தால்
மயிலினமாய் வருடுதடி ! ”
என்ற முதல் கவிதையிலேயே வாசிப்பவனையும்
வருடிச் செல்கிறார் .
” மருதாணி
வைத்துவிட்டு
வாசம் வருகிறதா ? என்றாய்
வரவில்லை , அதன் வாசம் – உன் கையில் !
வருகிறது , உன் வாசம் – மருதாணியில் ! “
என்ற கவிதையில் கற்பனையின் உச்சம்
தொடுகிறார் .
பொதுவாக எல்லாக் கவிதைகளுமே ஐந்து அல்லது
ஆறு வரிகளுக்குள்தான் எனினும் மூன்று நீள்வரிக் கவிதைகளும் உள்ளன . அதில் ஒன்றான “
கல்லூரிப் பேருந்து “ கவிதை இப்படி முடிகிறது ...
” முன்
இருக்கையில் நீ !
பின் இருக்கையில் நான் !
நீ பார்த்து விட்டு ,
எனக்கு அனுப்பும் அந்த
வெளிப்புறக் காட்சிகள்
அன்று மட்டும் என்னவோ
அத்துணை அழகாய்
தோற்றம் தருகிறது ...
என் விழிகளுக்கு ... “
வாசித்து முடிக்கையில் அவருக்குப் பின்
இருக்கையில் நாம் அமர்ந்திருக்கும் உணர்வை உருவாக்குகிறது வரிகள்.
” உன்
ஞாபகமாய்
எதுவுமில்லை என்னிடம் !
உன் ஞாபகங்களைத் தவிர ... “
**************************************
உன் கண்ணீர்த்துளிகளைக்
காணும்போதெல்லாம்
என் உதடுகளுக்கு
உப்புத்தண்ணீரின் மீது
ஆசை வந்து விடுகிறது ... !
என்ற கவிதைகள் காதலில் கவித்துவம்
தவிர்க்கப்பட இயலாது என உணர்த்துகிறது .
முகநூலின் இன்னொரு முகத்தைக் காட்டிச்
செல்கிறார் ஒரு கவிதையில்
” போதுமான போலி
அக்கவுண்டுகள் அவசியமாகின்றன !
ஒற்றை ‘ லைக் ‘ குடன்
எப்படிக் கடப்பது ?
உன் ஃபேஸ்புக் புகைப்படப் புன்னகையை ... !
“
சொல் , பொருள் மயக்கம் சில கவிதைகளில்
இருப்பதாகவேப் படுகிறது .
” நிலவுகளில்
நிதம்
நீதான் ! “
வார்த்தை ஜாலம் நயம் . ஆனால் ஒரு நிலவு பல
நிலவுகளாக மாறி ஒரு மயக்கத்தை உருவாக்கி விட்டது போலும் .
”
காதல் தோல்விகள் –
நிறுத்தம் வந்தபின் கிடைக்கிற
பேருந்து இருக்கைகள் ... ! “
என்ற கவிதையிலும் இலேசான கருத்து மயக்கம் .
யதார்த்தத்தில் வேறு காதலோ அல்லது திருமணமோ நிகழ்ந்தபின் கிடைக்கும் முதல் காதலின்
வெற்றிதான் நிறுத்தம் வந்தபின் கிடைக்கிற பேருந்து இருக்கைகளுக்கு இணையானவை என்ற
எண்ணம் உருவாகுவதை வாசிக்கையில் தவிர்க்க இயலவில்லை .
வல்லினத்தில் ஆரம்பித்த தொகுப்பை ,
பெருமழையாய் முடித்திருக்கிறார் கடைசிக் கவிதையில் .
” சிறு
பிள்ளையின்
முதல் புன்னகையில் தொடங்கி ,
பெருமழையின்
கடைத்தூறலில் முடிகிறது
உனக்கான என் கவிதை ... ! “
காதல் வயப்பட்ட இளைஞர்களுக்கு நிச்சயமாய்
ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் இந்தக் கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் முகநூலில் “ காகிதக் கவிதைகள் “
என்று ஒரு பக்கத்தில் தன் கவிதைகளைப் பதிவிடுகிறார் . அந்தக் கவிதைகளிலும் ,
கல்லூரி நினைவுகள் குறித்த அவரது சமீபத்திய பதிவுகளிலும் அவர் தன் தளத்தை விரிவு
படுத்தி விட்டார் என உணர முடிகிறது . நிச்சயமாக அவரது அடுத்த தொகுப்பில் காதலைத்
தாண்டி வந்து பரந்த தளத்தில் கவிதைகளைத் தருவார் என நம்பலாம் . வாழ்த்துவோம் .
-----------------------------------------------------------------
ஞாயிறு, 25 அக்டோபர், 2015
புதன், 21 அக்டோபர், 2015
வாழப் பழகிக் கொள்கிறோம் .
வாழப் பழகிக் கொள்கிறோம் .
துளி இரத்தம் உறிஞ்சும்
சிறு கொசுக்களை
புகைபோட்டு விரட்டி விடுகிறோம்
அல்லது
காற்றில் கலக்கும்
வேதியியல் காரணி வழி
கலைத்து விடுகிறோம்
அல்லது
மட்டையால் மடக்கிப்
பிடித்தெரித்து விடுகிறோம்
சமயங்களில்
விடாது துரத்தி
வெறுங்கையாலேயே
நசுக்கி விடுகிறோம்
எனினும் மொத்த வாழ்வையும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
எத்தனையோ
விஷப் பூச்சிகளை
ஏதும் பண்ண இயலா
கையாலாகாத் தனத்தோடு
வாழப் பழகிக் கொள்கிறோம் .
[ புதுப்புனல் ஜீன்
2015 ]
வெள்ளி, 16 அக்டோபர், 2015
” குழந்தைகளைத் தேடும் கடவுள் ” – ஒரு வாசிப்பு அனுபவம் .
” குழந்தைகளைத்
தேடும் கடவுள் ” –
ஒரு வாசிப்பு அனுபவம் .
கவிஞர் ச. கோபிநாத் எழுதி வாசகன் பதிப்பகம்
வெளியிட்டுள்ள ஹைக்கூத் தொகுப்பு “குழந்தைகளைத் தேடும் கடவுள் “ . சிறந்த ஹைக்கூ
நூலுக்கான மின்மினி – கார்முகிலோன் ஹைக்கூ விருது பெற்ற நூல் .
பக்கத்திற்கு நான்காக 39 பக்கங்களில் 156
ஹைக்கூக்கள் [ சென்ரியு உட்பட ] அடங்கிய அருமையான தொகுப்பு . தளத்தை சுருக்கிக்
கொள்ளாமல் குழந்தைகள் மன உலகம் , சமூக அவலங்கள் , சமூகச் சிந்தனைகள் , இயற்கையின்
அருமை , பண்பாட்டின் பெருமை மற்றும் அதன் அழிவு குறித்த பொருமல் , சுற்றுச் சூழல்
மாசு படுதல் குறித்த கவலை , தமிழ் மீது உள்ள காதல் , விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த
பார்வை , மூடநம்பிக்கை குறித்த எள்ளல் , கூடவே சிறிது வாழ்க்கைத் தத்துவங்கள்
என்று பரந்த களத்தில் தன் கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறந்திருக்கிறார் கவிஞர்
கோபிநாத் .
தொழிலால் ஆசிரியர் என்பதால் குழந்தைகளைக்
குறித்து நிறையக் கவிதைகள் உள்ளன . எனினும் குழந்தை , கடவுள் இருவரையும் இரு
வேறுபட்ட பார்வைகளில் பார்க்கும் கீழ் கண்ட கவிதைகள் நயம் அருமை . ஒன்றில்
தத்துவமும் இன்னொன்றில் எள்ளலும் நடை போடுகின்றன .
குழந்தைகளைத் தேடும்
கடவுள்
நிம்மதிப் பெருவாழ்வு .
********************
கடவுளைத் தேடும்
குழந்தைகள்
தேர்வு நாள் .
**********************
தவிர்க்க இயலாமல் கண்ணில் படும் காட்சிகளை
மாற்றுச் சிந்தனையில் பார்க்கிறார் இன்னொரு கவிதையில் .
வீணாகவில்லை
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை .
*********************************
கவிஞனின் சுய எள்ளலாக வெளிப்படுகிறது
இன்னொரு கவிதை .
சூடாக இருந்தன
கவிதைகள்
திண்பண்டத் தாள் .
*************************
மறைபொருளாய் எதையோச் சுட்டிக் காட்டிச்
செல்கிறார் சமயங்களில்
வளரத்துடிக்கும் வேர்கள்
வெட்டப்படும் வேதனை
தொட்டிச்செடி வாழ்க்கை .
********************************
வாசிப்பவனின் கற்பனைகளை வெவ்வேறு திசைகளில்
சிறகடிக்க வைக்கிறது சில கவிதைகள் .
சலசலப்பிருந்தும்
சலனமில்லை
நதியின் பயணம் .
***************************
அடர்காடு
ஆரவாரமின்றி
குயிலோசை .
*************************************
மொத்தத்தில் நல்ல
வாசிப்பு அனுபவமாக அமைந்துள்ளது தொகுப்பு .
கவிஞரின் படைப்புகள்
பெருக வாழ்த்துகள் .
” குழந்தைகளைத்
தேடும் கடவுள் ” – ஹைக்கூத் தொகுப்பு .
வெளியீடு – வாசகன்
பதிப்பகம் , சேலம் .
விலை – ரூபாய் 50 /
----------------------------------------------------------------------
வியாழன், 15 அக்டோபர், 2015
திங்கள், 12 அக்டோபர், 2015
” ஆலிவ் இலைகள் . ” [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
”
ஆலிவ் இலைகள் . ” [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு
அனுபவம் .
-------------------------------------------------------------------
” ஆலிவ்
இலைகள் “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – கவிஞர் கூடல் தாரிக் .[ முனைவர்
கா . பீர்முகமது தாரிக் ] [ 99425 30284
]
வெளியீடு – கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ் , தேனூர்
, மதுரை .
விலை – ரூபாய் 50 /
கவிஞரின் முதல்
தொகுப்புதான் எனினும் அனுபவ வரிகளும் , அழகிய கவித்துவமும் அடங்கிய தொகுப்பு .
51 தலைப்புகளில் சில
குறுங்கவிதைகளும் , பல நீள் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு . கவிதைகள் மட்டுமல்ல
புத்தக வடிவமைப்பும் அழகுதான் . கண்களை உறுத்தாத எழுத்துகளும் , கவிதைகளுக்கேற்ற
படங்களும் சிறப்பு .
பல நீள் கவிதைகள்
அநேகமாக ஒன்றுக்கொன்று தொடர்புள்ள குறுங்கவிதைகளாக எழுதப் பட்டிருப்பது கூடுதல்
சிறப்பு . தனித் தனியே வாசித்தாலும் தலைப்பில் தந்திருக்கும் பாடுபொருளை நம் கண்
முன் கொண்டு வந்து விடுகின்றன .
வாழ்வின் முழுமையை
குறியீடாக உணர்த்துவது போல ” குழந்தை “ பருவத்தின் சிறப்பு குறித்த கவிதையில்
ஆரம்பமாகும் தொகுப்பு , மெழுகுவர்த்தியாய் உருகிய “ அம்மா “ அணைந்து போன சோகத்தில்
முடிகிறது .
இடையில் கவிதைகள்
விரிவான களங்களில் விரவிக் கிடக்கின்றன . சமூகம் , காதல் , பாசம் , பாசத்திற்கான
ஏக்கங்கள் , இயற்கையும் அதன் இழப்புகளும் , பறவைகளின் உலகமும் அவற்றின் மொழிகளும்
, நாகரீகத்தின் நன்மைகளும் , தீமைகளும் .... என சிறகுகளை விரித்து
பறந்திருக்கிறார் கவிஞர் . தமிழ் ஆசிரியர் என்பதால் பொருத்தமான சொற்கள் தானாகவே
வந்து அதனதன் இடத்தில் அமர்ந்து விடுகின்றன .
முதல் கவிதை “
குழந்தை “ மூலமே வாசிப்பவனை தன் வசமாக்கிக் கொள்கிறார் அதன் அர்த்தமும் , அழகும்
நிறைந்த வரிகளால் .
அறியாப் பருவத்தில் ,
சூழலுக்கேற்ப அப்பா , அம்மாவில் ஆரம்பித்து டீச்சராக , பேருந்து ஓட்டுனராக , மீன்
விற்கும் அக்காவாக , குடை பிடித்து வரும் அத்தையாக தன்னை எளிதாக மாற்றிக் கொள்ள
இயலுகிறது குழந்தையால் எனச் சொல்லி நிறுத்தி ,
“ எவராலும் / மாற
முடிவதில்லை / குழந்தையாக “ என முடியும் கவிதை வரிகள் வாசிப்பவன் மனதில் மீண்டும்
குழந்தையாகும் ஏக்கத்தை உருவாக்காமல் அடுத்த கவிதைக்கு கடந்து போக விடாது .
“ வாழ்க்கை / வாழ்வதற்கல்ல
/ பகிர்வதற்கு / சாட்சியாய் /
குழந்தைகளும்
பொம்மைகளும் “ என்று “ பகிர்தல் “ எனும் கவிதையில் வாழ்வின் பொருளை எளிதாக
பகிர்ந்து கொண்டிருக்கிறார் .
இயற்கையின்
அருமையையும் அவசியத்தையும் “ நதி “ மூலம்
சில வரிகளில் உணர்த்தி விடுகிறார் .
“ வரைபட / உள்ளங்கையில்
/ கோடுகளாகத் தெரிவது / நதிகளல்ல /
உலகின் / எதிர்காலத்தை
/ நிர்ணயிக்கும் / ஆயுள் ரேகைகள் “
தேனிக்காரர் என்பதால்
“ பென்னி குக் “ குறித்து எழுதாமல் இருக்க இயலுமா ?
” காலமென்னும் சிலுவையில் / அறையப்படலாம் / உன் நினைவுகள்
/
பள்ளத்தாக்குக்
கவிஞர்கள் / நாங்களிருக்கிறோம் / எங்கள் / கவிதைகளால் / உயிர்த்தெழச் செய்வோம் / உன்னை
. “
[ தஞ்சை தமிழ் பல்கலைக்
கழகத்தில் ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை இதுவென்பது கூடுதல்
சிறப்பு . ]
“ பறவைகளில் / காகம்
அழகானது / எச்சில் இலைகளை நோக்கி /
ஓடும் மனிதர்களுக்கு
மத்தியில் / நடைமுறைப்படுத்தும் /
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் / என்ற தமிழ் மரபை . “
என்று “ அழகியல் “
குறித்த வேறுபட்ட சிந்தனையைத் தூவியுள்ளார் .
கறுப்பு வெள்ளைக்
கனவுகளை அடுக்கிச் செல்கையில் ,
“ அலைபேசி மணி
அடிக்காத / மவுன அஞ்சலி நிகழ்வு “ ... என யதார்த்தத்தை தலையில் குட்டிச் செ[
சொ]ல்கிறார் .
” அகப்பார்வை / அற்றவனாக / இருப்பினும் / உணர்கிறேன் / உன்
/
தரிசனத்தை
*
மேனியெங்கும் / பரவும்
/ குளிர்ச்சியால் “ என்ற வரிகளில்
உணரப்படும் “ தரிசனம் “ நிலவாலா , தென்றலாலா ... என்று வாசிப்பவனையும் யோசிக்க
வைத்து விடுகிறது .
வெளிநாட்டில்
வேலைக்குச் சென்றிருக்கும் கணவனை நினைத்து மனைவியின் கடிதமும் , பதிலாக கணவனின்
கடிதமும் அடுத்தடுத்த கவிதைகளாக மனதை எதோ செய்கிறது .
“ விதவிதமாக / என்னவன்
/ நீ / அனுப்பிய வாசனை /
திரவியங்களிலிருந்து
/ ஏமாற்றத்தின் வாசனை “ [ அவள் ]
***************************
மனச் சுழலிற்குள் / சிக்கியவாறு
நீ / மணற்சுழலிற்குள் /
சிக்கியவாறு நான் . “
[ அவன் ]
******************************
முதிர் கன்னியை இதழாக
பாவித்து , வாசிப்பவர்களை துடிக்க வைக்கின்றன வரிகள் .
“ முன் அட்டையையும் /
பின் அட்டையையும் / பார்க்கத் துடிப்பவர்கள் /
படிக்க நினைப்பதில்லை
/ உள் பக்கங்களை . “
பண்டிகைக் காலத்தில்
வீடு ஒழுங்க வைக்கப் படுகையில் காணாமல் போன எத்தனையோ பொருட்கள் கிடைத்தும் கூட ,
கவிஞர் வருத்தமே படுகிறார் :
” யாருமே தேடவேயில்லை / நீண்ட காலமாய் / காணாமல்
போயிருந்த /
சிட்டுக் குருவியை .
“
**************************
“ வாழ்க்கையென்னும் /
பேருந்துப்பயணத்தில் / பயணச்சீட்டை /
பறக்க விட்டவர்கள் “ என
உருவகப் படுத்துகிறார் குழந்தை தொழிலாளர்களை .
“ பொற்குவியலை / விரும்பமாட்டீர்
/ என்பதனால் / சொற்குவியலாய் / பெறுவீர் / எமது / கவிதையை “ என முடிக்கிறார்
மறைந்த அப்துல் கலாம் அவர்களிடம் நேரில் வழங்கிய வாழ்த்துக் கவிதையை .
“ சாகுபடி இல்லாததால்
/ சாகும்படி ஆன / விவசாயிகளின் / விடியல் /
விளைநிலங்களில் / விளைச்சலில்
“ என விவசாயியின் விடியலுக்கு விளக்கம் அளித்துவிட்டு
“ கவிஞனின் விடியலோ /
சமூக இருட்டிற்கான / நிரந்தர வெளிச்சம் “ என முடிக்கிறார் .
லெபனான் நகரின் பெய்ரூத்
வீதிகளெங்கும் வீசும் ஆலிவ் இலைகளின் வாசனையில் துவங்கி
“ இடைவிடாது வீசும் /
தென்றல் காற்று / ஆலிவ் இலைகளின் /
வாசனையை / பரவச்செய்யும்
/ உலகம் முழுவதும் “ என முடிக்கும் கவிதையில் உள்ள உருவகங்களும் , படிமங்களும்
வாசிப்பவனை எங்கெங்கோ இட்டுச் செல்கின்றன .
“ ஓர் / அடைமழை
நாளில் / ஒற்றை மெழுகுவர்த்தியாய் /
எனக்காக உருகிய / அம்மா
/ அணைந்து போனாள்
வறுமைக் காற்றில் ”
என்ற கடைசிக் கவிதையின் வரிகள் உருகத்தான்
வைக்கின்றன நம் மனதையும் .
கவிதை வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்
நிச்சயம் இந்தத் தொகுப்பை வாசிக்கையில் வரிகளின் அழகாலும் , வலிமையாலும் ,
ஆழத்தாலும் ஈர்க்கப் படுவார்கள் .
அடுத்த தொகுப்பை விரைவில் வெளிக் கொண்டு வர
இருக்கும் கவிஞர் கூடல் தாரிக் அவர்களுக்கு வாழ்த்துகள் .
________________________________________________________________________
வெள்ளி, 9 அக்டோபர், 2015
கேள்விகளும் பதில்களும் .
கேள்விகளும் பதில்களும் .
கேட்டிருந்திருக்கலாம்
அந்தக் கேள்விகளை
எதிர்ப்பட்ட யாரேனும் ஒருவரிடம் .
சொல்லியிருந்திருக்கலாம்
அந்தப் பதில்களை .
கேட்கப்படாத
கேள்விகளும்
அளிக்கப்படாத
பதில்களும்
சுற்றிச்சுற்றி
வருகின்றன மனதிற்குள் .
கேட்டுவிடலாம்
அல்லது சொல்லப்படலாம்
என்றேனும்
ஒருநாள் யாரேனும் ஒருவரிடம்
என்ற
அதீத நம்பிக்கைகளோடு .
[
தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]
வியாழன், 8 அக்டோபர், 2015
வரி அல்லது வலி ....
வரி அல்லது வலி ....
இந்தக் கவிதை குறித்த
ஓர் உண்மையை
இப்போதே கூறிவிடுவது
உத்தமமெனத் தோன்றுகிறது .
இந்தக் கவிதையின்
ஆரம்பவரிகள் மட்டுமே
கவிஞனுக்குரியவை
தொடரப் போகும் வரிகளில்
சில வரிகளோ
இல்லை அத்தனை வரிகளுமோ
உங்களில் சிலரது அல்லது பலரது
வரிகளாக இருக்கக்கூடும்
அல்லது வலிகளாகவும் இருக்கலாம் .
[ புதுப்புனல் ஜீன்
2015 ]
புதன், 7 அக்டோபர், 2015
செவ்வாய், 6 அக்டோபர், 2015
திங்கள், 5 அக்டோபர், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)