அம்மாவின் கோலம் [ ஜெயதேவன்
] – ஒரு வாசிப்பு அனுபவம் .
----------------------------------------------------------
கவிதையில் “ இருண்மை “ வேண்டாம் என்று
உரக்கச் சொல்லும் ஒரு கவிஞரின் கவிதைகளில் “ வெளிச்சம் “ தவிர வேறு எதை எதிர்
பார்க்க முடியும் ? கவிஞர் ஜெயதேவனின் “ அம்மாவின் கோலம் “ தொகுப்பில் உள்ள 43
கவிதைகளும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன நமது இன்றைய வாழ்க்கை முறையையும் ,
அதன் மூலம் நாம் இழந்தவற்றையும் . வெளிச்சம் என்றால் கண் கூச வைக்கும் வெளிச்சம்
இல்லை ; மனம் கூச வைக்கும் வெளிச்சம் . நாமேதான் நம்மை ஒருவித இருட்டிற்குள்
நுழைத்துக் கொண்டு வாழ்கிறோம் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன கவிதை
வரிகள் .
*******************************************
ஆயினும் விற்க இன்னும் மிச்சம்
இருந்து கொண்டுதானிருக்கிறது வாழ்க்கை . [
வாழ்வின் முடிச்சுகள் ]
***************************************************************************
வெளிச்சம் என்றால் ஒளி இல்லாமல் இருக்குமா
? ஒளி இருந்தால் சூடும் அநேகமாக தவிர்க்க
முடியாதுதானே ? நிறையவே இருக்கிறது சூடு இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் .
சூடுகள் வலியை உண்டாக்கினாலும் வடுக்களை உண்டாக்கவில்லை . மாறாக சூழலில் இருந்து
விடுபட வழியைத்தான் காட்டிச் செல்கின்றன வரிகள் .
*****************************************
40 சதவீதம் மனிதனாகவும்
60 சதவீதம் சராசரியாகவும் . [ முன்னுக்குப்
பின் ]
********************************************************
டாஸ்மாக்கில் குப்புறக்கிடப்பவனும்
எதிர்பார்க்கிறான் கலப்படமற்ற போதையை . [
கல்லெனக் கிடக்கிறது காலம் ]
***********************************************************************
வானம்பாடிக் கவிஞர்களின் காலத்தைச் சேர்ந்த
அநேக கவிஞர்கள் சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளாக குறுகிய வட்டத்திலேயே உழன்று
கொண்டிருக்கும் போது , அவர்களில் ஒருவரான ஜெயதேவன் அதி நவீன சிறகுகளை வளர்த்துக்
கொண்டு கால மாற்றத்திற்கேற்பத் தன் கவிதைகளையும் பரந்த எல்லைகளில் பறக்க
வைத்திருக்கிறார் .
**************************************
பிரமாண்டமானது எல்லாம்
பயமானதும் கூட . [ கவிதையின் கருவறை ]
*****************************************************
நாம் புரியினும் புரியாவிடினும்
என்றும் நம்மோடிருப்பது என்னவோ
நம்மூர் பெருமாள்கோயில் மாடுகளும்
மந்தையில் நிற்கும் அரசமரமும்தான் . [
உறவுகள் ]
***************************************************************
தொகுப்பில் மூன்று வீடுகளை
கட்டியிருக்கிறார் / காட்டியிருக்கிறார் . ஒவ்வொரு வீட்டில் புகுந்து வெளிவரும்
போதும் வெவ்வேறான உணர்வுகளுடன்தான் வெளிவர வேண்டியதிருக்கிறது .
****************************************************
உணர்ச்சிகளால் கட்டப்பட்டவன் மனித
உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல வீடு
. [ வீடு 1 ]
******************************************************************
வீடு கனமானதுதான்
வீடு கனக்கிறது என்று
காட்டுக்குப் போனவன் காடு பூராவும் வீடு .
[ வீடு 2 ]
*********************************************************************
பொதுவாக பெயர்களையும் , பொருட்களையும்
அடுக்கி வைத்து எழுதப்படும் கவிதைகளை கேட்லாக்கிங் கவிதைகள் என்று வகைப்
படுத்துவார்கள் . ஆனால் தொகுப்பில் உள்ள சில கவிதைகளில் பெயர்களும் , பொருட்களும்
அடுக்கப் பட்டிருந்தாலும் அவை கலிடியாஸ்கோப் காட்சிகளாக விரிந்து ஒவ்வொரு
வாசிப்பிலும் வெவ்வேறு காட்சிகளையும் ,
பொருளையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன . ஒரு கவிதைக்குள் எத்தனை
வேறுபட்ட விஷயங்களை நுழைக்க முடிகிறது இவரால் என்ற வியப்பு சில கவிதைகளை வாசிக்கையில்
தவிர்க்க முடியாததாகி விடுகிறது .
ஹீமொகுளோபின்கள் , நியுரான்கள் , மைக்கேல்
ஜாக்சன் , காரல் மார்க்ஸ் , கண்ணதாசன் , ஜிப்ரான் , உமர்கயாம் , பாரதி , கூடவே
கஞ்சா புகை என்று கலந்து கட்டியுள்ள “ டம்ளரில் ஊற்றப்படும் வாழ்க்கை “ என்ற
கவிதையை வாசிக்கையில் இந்த வாழ்க்கை அவருக்கு மட்டுமானதாக இல்லாமல் வாசிக்கும்
எனக்கும் , உங்களுக்கும் உரித்ததாகி விடுகிறது .
*******************************************
உமர்கயாம் பாரதி விட்ட
கஞ்சா புகையிலும் இருக்கிறதே
நமக்கான கவிதைகள் .
************************************************
கவிஞனாய் இருப்பது வரமா , சாபமா என்று
கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் உள்ளது ” வாழ்க்கைக்குத் தூரமாய் ” கவிதை .
**************************************************************************
உரசினால் பற்றும் தீக்குச்சியாய்
பிறப்பெடுத்த கவிஞனால் வேறென்ன
செய்யமுடியும் ?
***********************************************************************
அடுக்கிக் கொண்டே போகலாம் தொகுப்பில் உள்ள
கவிதைகளில் மனதை ஊடுருவும் கேள்விகளை – கீழே உள்ளவை போன்று .
**************************************************************
வடக்கே எத்தனை காதம் நம்ஊர் ?
தெற்கே எத்தனை காதம் நம் காடு ? [ திசைகள் ]
***************************************************************
நீங்கள் நடந்த நிழலில்தான்
நடக்கிறது என் நிகழ்கால நிஜம் . [ அப்பாவுக்குக் கடிதம் ]
*********************************************************************
ஆயினும் தொகுப்பை முழுமையாக வாசித்துப்
பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும் ஒரு போன தலைமுறைக் கவிஞனின் இன்றைய
வாழ்க்கை குறித்த நவீன பார்வை ஜெயதேவன் போன்றவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்
வித்தையை . பரவிக் கிடக்கும் படிமங்களும் , உருவகங்களும் , தொன்மங்களும்
வாசிப்பவனுக்கு மனதில் நிறைய வேலையை உருவாக்கும் அருமையான தொகுப்பு .
-----------------------------------------------------------
‘
அம்மாவின் கோலம் ‘ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – ஜெயதேவன் .
வெளியீடு – எழுத்து , சென்னை .
விலை – ரூ 60 /
----------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக