” ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –இரா . பூபாலன் [ கவிதைத்
தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
-------------------------------------------------------------
வாழ்க்கை அவலங்களாலும் , கவலைகளாலும்
இன்னும் பிற வருத்தம் தரும் உணர்வுகளாலுமே நிரம்பி வழிகிறது . எனினும் அவ்வப்போது
அழகான பக்கங்களையும் நமக்குக் காட்டிக் கொண்டுதான் நகர்ந்து கொண்டிருக்கிறது .
வாழ்வின் இரு பக்கங்களையும் வாசிப்பவரோடு பகிர்ந்து கொள்வதுதான் ஒரு படைப்பாளியின்
முதல் நோக்கமாக இருக்க முடியும் . அதிலும் குறிப்பாக கவிதைகளில் . அதைச் செவ்வனச்
செய்து காட்டியுள்ளார் இரா . பூபாலன் தனது ” ஆதிமுகத்தின் காலப்பிரதி “ கவிதைத் தொகுப்பில்
.
இப்போது
உங்கள்
கைத்துப்பாக்கி
நடுங்காமலிருக்கட்டும்
நம்புங்கள் ஆறு தோட்டாக்களில்
ஆகச் சிறந்தது
கடைசித் தோட்டா
மட்டுமே .
” ஆறு தோட்டாக்கள் உள்ள துப்பாக்கி ... “ என்ற கவிதையின்
இந்தக் கடைசி வரிகளை வாசித்து முடிக்கையில் , முதல் ஐந்து தோட்டாக்களில் எத்தனையை
நாம் இது வரை அடுத்தவர் மீது பயன்படுத்தியுள்ளோம் , எத்தனை தோட்டாக்களை பிறர் நம்
மீது பயன்படுத்தியுள்ளார்கள் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலாது .
*******************************************
மனித இனம் இயற்கையோடு
ஒன்றி வனத்தில் வாழ்ந்த காலத்திலும் வாழ்க்கை முற்றிலும் இனிப்பாக மட்டுமே
இருந்தது என்று சொல்ல இயலாதுதான் . ஆனால் இன்றைய நாகரீக சமூகத்தில் நிகழும்
அவலங்களோடு ஒப்பிட்டால் அவை ஒன்றுமில்லை என்று உணர்த்தும் வகையில் இப்படி
முடிக்கிறார் ஒரு கவிதையை ....
சில மிருகங்கள்
அவளை
வேட்டையாடிவிட்டன
என்று நான்
இக்கவிதையை
முடித்தால் நிச்சயம்
அவள் என்னை
மன்னிக்கமாட்டாள் .
**********************************************
தர்மத்தைக்
காப்பாற்றுவது இன்றைய கால கட்டத்தில் அவ்வளவு எளிதல்ல என்பதை பகடியாக இப்படிக்
கூறுகிறார் இன்னொரு கவிதையில் – கையாலாகாக் கண்ணன்
இந்த முறை
காது கேட்காத மாதிரி
நடிக்கத்
துவங்குகிறான் .
******************************
நாம் இயற்கைக்குத்
துரோகம் செய்தாலும் , இயற்கை இயன்ற அளவு நம்மைக் கைவிடாதுதான் இருக்கின்றது
என்பதைக் காட்டும் அழகான் வரிகள் –
மஞ்சள் மலரொன்றை
என் மீது
விழச்செய்து
ஆசிர்வதித்த
பின்னர்தான்
வெட்டத் துவங்கினேன்
அம்மரத்தை .
******************************************
வாழ்வின் அவலமான
பக்கங்களை பல கவிதைகளில் வலிமையும் , வலியும் மிகுந்த வார்த்தைகளால் கண் முன்
கொண்டு வந்து நிறுத்தும் கவிதைகள் தொகுப்பு முழுவதும் பரவிக் கிடக்கின்றன .
எனினும் அவை தரும் மனச் சோர்வைப் போக்கும் வகையில் , எந்த ஒரு மனிதனின் வாழ்விலும்
சற்று கூடுதலாக வெளிச்சம் தருபவர்கள் குழந்தைகள்தான் என்பதை உணர்த்தும் விதமாக , தவிர்க்க
முடியாத செயற்கைப் பூச்சுகளை இன்னும் பூசிக் கொள்ளாத குழந்தைப் பருவத்தின் அழகான
தருணங்களைத் தன் கவிதைகளில் அங்கங்கே தூவியுள்ளார் .
கதைப் புத்தகத்தின்
பக்கத்தில்
புலி துரத்திக்
கொண்டோடும்
மானுக்குக்
கூடுதலாக இரண்டு
கால்கள்
வரைகிறது குழந்தை .
***********************************
வெள்ளிக் கிழமை
சாயங்கால மகளைப் போல
இருப்பதில்லை
திங்கட்கிழமை காலை
மகள்......
***********************************
தொகுப்பை முழுவதுமாக வாசிக்கும் போதுதான்
கவிஞரின் வார்த்தைகளின் வீரியத்தை உணர இயலும் . எடுத்துக் காட்டாக .....
அன்பின் குரல்களுக்கு
எப்போதும் ஒரே முகம் .
***********************************
வாழ்த்துகள் பூபாலன் இன்னும்
....இன்னும்....வீரியம் மிக்க தொகுப்புகள் பல கொண்டு வர .
***********************************
” ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –
கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – இரா . பூபாலன் .
வெளியீடு – பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ,
பொள்ளாச்சி .
விலை – ரூ 70 /
------------------------------------------------------------------