”
ஆலிவ் இலைகள் . ” [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு
அனுபவம் .
-------------------------------------------------------------------
” ஆலிவ்
இலைகள் “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – கவிஞர் கூடல் தாரிக் .[ முனைவர்
கா . பீர்முகமது தாரிக் ] [ 99425 30284
]
வெளியீடு – கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ் , தேனூர்
, மதுரை .
விலை – ரூபாய் 50 /
கவிஞரின் முதல்
தொகுப்புதான் எனினும் அனுபவ வரிகளும் , அழகிய கவித்துவமும் அடங்கிய தொகுப்பு .
51 தலைப்புகளில் சில
குறுங்கவிதைகளும் , பல நீள் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு . கவிதைகள் மட்டுமல்ல
புத்தக வடிவமைப்பும் அழகுதான் . கண்களை உறுத்தாத எழுத்துகளும் , கவிதைகளுக்கேற்ற
படங்களும் சிறப்பு .
பல நீள் கவிதைகள்
அநேகமாக ஒன்றுக்கொன்று தொடர்புள்ள குறுங்கவிதைகளாக எழுதப் பட்டிருப்பது கூடுதல்
சிறப்பு . தனித் தனியே வாசித்தாலும் தலைப்பில் தந்திருக்கும் பாடுபொருளை நம் கண்
முன் கொண்டு வந்து விடுகின்றன .
வாழ்வின் முழுமையை
குறியீடாக உணர்த்துவது போல ” குழந்தை “ பருவத்தின் சிறப்பு குறித்த கவிதையில்
ஆரம்பமாகும் தொகுப்பு , மெழுகுவர்த்தியாய் உருகிய “ அம்மா “ அணைந்து போன சோகத்தில்
முடிகிறது .
இடையில் கவிதைகள்
விரிவான களங்களில் விரவிக் கிடக்கின்றன . சமூகம் , காதல் , பாசம் , பாசத்திற்கான
ஏக்கங்கள் , இயற்கையும் அதன் இழப்புகளும் , பறவைகளின் உலகமும் அவற்றின் மொழிகளும்
, நாகரீகத்தின் நன்மைகளும் , தீமைகளும் .... என சிறகுகளை விரித்து
பறந்திருக்கிறார் கவிஞர் . தமிழ் ஆசிரியர் என்பதால் பொருத்தமான சொற்கள் தானாகவே
வந்து அதனதன் இடத்தில் அமர்ந்து விடுகின்றன .
முதல் கவிதை “
குழந்தை “ மூலமே வாசிப்பவனை தன் வசமாக்கிக் கொள்கிறார் அதன் அர்த்தமும் , அழகும்
நிறைந்த வரிகளால் .
அறியாப் பருவத்தில் ,
சூழலுக்கேற்ப அப்பா , அம்மாவில் ஆரம்பித்து டீச்சராக , பேருந்து ஓட்டுனராக , மீன்
விற்கும் அக்காவாக , குடை பிடித்து வரும் அத்தையாக தன்னை எளிதாக மாற்றிக் கொள்ள
இயலுகிறது குழந்தையால் எனச் சொல்லி நிறுத்தி ,
“ எவராலும் / மாற
முடிவதில்லை / குழந்தையாக “ என முடியும் கவிதை வரிகள் வாசிப்பவன் மனதில் மீண்டும்
குழந்தையாகும் ஏக்கத்தை உருவாக்காமல் அடுத்த கவிதைக்கு கடந்து போக விடாது .
“ வாழ்க்கை / வாழ்வதற்கல்ல
/ பகிர்வதற்கு / சாட்சியாய் /
குழந்தைகளும்
பொம்மைகளும் “ என்று “ பகிர்தல் “ எனும் கவிதையில் வாழ்வின் பொருளை எளிதாக
பகிர்ந்து கொண்டிருக்கிறார் .
இயற்கையின்
அருமையையும் அவசியத்தையும் “ நதி “ மூலம்
சில வரிகளில் உணர்த்தி விடுகிறார் .
“ வரைபட / உள்ளங்கையில்
/ கோடுகளாகத் தெரிவது / நதிகளல்ல /
உலகின் / எதிர்காலத்தை
/ நிர்ணயிக்கும் / ஆயுள் ரேகைகள் “
தேனிக்காரர் என்பதால்
“ பென்னி குக் “ குறித்து எழுதாமல் இருக்க இயலுமா ?
” காலமென்னும் சிலுவையில் / அறையப்படலாம் / உன் நினைவுகள்
/
பள்ளத்தாக்குக்
கவிஞர்கள் / நாங்களிருக்கிறோம் / எங்கள் / கவிதைகளால் / உயிர்த்தெழச் செய்வோம் / உன்னை
. “
[ தஞ்சை தமிழ் பல்கலைக்
கழகத்தில் ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை இதுவென்பது கூடுதல்
சிறப்பு . ]
“ பறவைகளில் / காகம்
அழகானது / எச்சில் இலைகளை நோக்கி /
ஓடும் மனிதர்களுக்கு
மத்தியில் / நடைமுறைப்படுத்தும் /
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் / என்ற தமிழ் மரபை . “
என்று “ அழகியல் “
குறித்த வேறுபட்ட சிந்தனையைத் தூவியுள்ளார் .
கறுப்பு வெள்ளைக்
கனவுகளை அடுக்கிச் செல்கையில் ,
“ அலைபேசி மணி
அடிக்காத / மவுன அஞ்சலி நிகழ்வு “ ... என யதார்த்தத்தை தலையில் குட்டிச் செ[
சொ]ல்கிறார் .
” அகப்பார்வை / அற்றவனாக / இருப்பினும் / உணர்கிறேன் / உன்
/
தரிசனத்தை
*
மேனியெங்கும் / பரவும்
/ குளிர்ச்சியால் “ என்ற வரிகளில்
உணரப்படும் “ தரிசனம் “ நிலவாலா , தென்றலாலா ... என்று வாசிப்பவனையும் யோசிக்க
வைத்து விடுகிறது .
வெளிநாட்டில்
வேலைக்குச் சென்றிருக்கும் கணவனை நினைத்து மனைவியின் கடிதமும் , பதிலாக கணவனின்
கடிதமும் அடுத்தடுத்த கவிதைகளாக மனதை எதோ செய்கிறது .
“ விதவிதமாக / என்னவன்
/ நீ / அனுப்பிய வாசனை /
திரவியங்களிலிருந்து
/ ஏமாற்றத்தின் வாசனை “ [ அவள் ]
***************************
மனச் சுழலிற்குள் / சிக்கியவாறு
நீ / மணற்சுழலிற்குள் /
சிக்கியவாறு நான் . “
[ அவன் ]
******************************
முதிர் கன்னியை இதழாக
பாவித்து , வாசிப்பவர்களை துடிக்க வைக்கின்றன வரிகள் .
“ முன் அட்டையையும் /
பின் அட்டையையும் / பார்க்கத் துடிப்பவர்கள் /
படிக்க நினைப்பதில்லை
/ உள் பக்கங்களை . “
பண்டிகைக் காலத்தில்
வீடு ஒழுங்க வைக்கப் படுகையில் காணாமல் போன எத்தனையோ பொருட்கள் கிடைத்தும் கூட ,
கவிஞர் வருத்தமே படுகிறார் :
” யாருமே தேடவேயில்லை / நீண்ட காலமாய் / காணாமல்
போயிருந்த /
சிட்டுக் குருவியை .
“
**************************
“ வாழ்க்கையென்னும் /
பேருந்துப்பயணத்தில் / பயணச்சீட்டை /
பறக்க விட்டவர்கள் “ என
உருவகப் படுத்துகிறார் குழந்தை தொழிலாளர்களை .
“ பொற்குவியலை / விரும்பமாட்டீர்
/ என்பதனால் / சொற்குவியலாய் / பெறுவீர் / எமது / கவிதையை “ என முடிக்கிறார்
மறைந்த அப்துல் கலாம் அவர்களிடம் நேரில் வழங்கிய வாழ்த்துக் கவிதையை .
“ சாகுபடி இல்லாததால்
/ சாகும்படி ஆன / விவசாயிகளின் / விடியல் /
விளைநிலங்களில் / விளைச்சலில்
“ என விவசாயியின் விடியலுக்கு விளக்கம் அளித்துவிட்டு
“ கவிஞனின் விடியலோ /
சமூக இருட்டிற்கான / நிரந்தர வெளிச்சம் “ என முடிக்கிறார் .
லெபனான் நகரின் பெய்ரூத்
வீதிகளெங்கும் வீசும் ஆலிவ் இலைகளின் வாசனையில் துவங்கி
“ இடைவிடாது வீசும் /
தென்றல் காற்று / ஆலிவ் இலைகளின் /
வாசனையை / பரவச்செய்யும்
/ உலகம் முழுவதும் “ என முடிக்கும் கவிதையில் உள்ள உருவகங்களும் , படிமங்களும்
வாசிப்பவனை எங்கெங்கோ இட்டுச் செல்கின்றன .
“ ஓர் / அடைமழை
நாளில் / ஒற்றை மெழுகுவர்த்தியாய் /
எனக்காக உருகிய / அம்மா
/ அணைந்து போனாள்
வறுமைக் காற்றில் ”
என்ற கடைசிக் கவிதையின் வரிகள் உருகத்தான்
வைக்கின்றன நம் மனதையும் .
கவிதை வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்
நிச்சயம் இந்தத் தொகுப்பை வாசிக்கையில் வரிகளின் அழகாலும் , வலிமையாலும் ,
ஆழத்தாலும் ஈர்க்கப் படுவார்கள் .
அடுத்த தொகுப்பை விரைவில் வெளிக் கொண்டு வர
இருக்கும் கவிஞர் கூடல் தாரிக் அவர்களுக்கு வாழ்த்துகள் .
________________________________________________________________________